தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் தேவையற்றவை! இலங்கை அரசு

chennai-protestsதமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் தேவையற்றவை என்று இலங்கை அரசு கூறியுள்ளது. இதுகுறித்து இலங்கை வெளியுறவு அமைச்சகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டசபையில், கடந்த மாதம் 27–ந் தேதி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், இலங்கையை நட்பு நாடு என அழைக்கக்கூடாது என்றும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும், தமிழ் ஈழம் குறித்து இலங்கை தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தீர்மானத்துக்கு இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:–

இலங்கையை நட்பு நாடாக கருதக்கூடாது என்ற சிலரின் கோரிக்கைகள், மன அமைதியை குலைப்பதாக உள்ளன. இந்திய–இலங்கை நட்புறவுக்கு இவை ஏற்றதாக இல்லை.

தேவையற்ற, மிகைப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை கூறுபவர்கள், இலங்கையின் எதிர்காலத்துக்கு தீர்வாக அர்த்தமற்ற கோரிக்கைகளை எழுப்புபவர்கள் என அனைவரையும் இலங்கைக்கு நேரில் வந்து பார்க்குமாறு அழைப்பு விடுக்கிறோம். தேசத்தை மறுகட்டுமானம் செய்யும் பணியில் எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அவர்கள் நேரில் பார்க்கட்டும்.

தமிழ்நாட்டில், இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் தேவையற்றவை. மேலும், வெளிநாடுகளில் வசித்து வரும் இலங்கை தமிழர்கள் சிலர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவது வருத்தம் அளிக்கிறது.

இலங்கை தமிழர்களுக்கு அரசியல் உரிமை பெற்றுத்தருவது என்ற போர்வையில், அவர்கள் இலங்கைக்கு எதிரான கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர்.

எங்களை பொறுத்தவரை, மனித உரிமை மீறல் புகார்கள் எல்லாம், வதந்தி மற்றும் தவறான தகவல்கள் அடிப்படையில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆகும்.

எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதாக வெளியாகும் தகவல்களும் தவறானவை. அவற்றில் எந்த உண்மையும் இல்லை.

எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை மனிதாபிமான முறையில் நடத்துமாறு இலங்கை கடற்படைக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

TAGS: