‘மகிந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் தினத்திலேயே தமிழர்களுக்கு விமோசனம்’

Mano-may-dayமகிந்த தலைமையிலான இன்றைய அரசாங்கம் என்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றதோ அன்றைய தினத்தில்தான் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் என அனைத்துப் பகுதி மக்களுக்கும் விமோசனம் கிடைக்கும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள் முன்னணி, நவ சமசமாஜ கட்சி மற்றும் தேசிய ஐக்கிய முன்னணி ஆகிய மூன்று அமைப்புகள் இணைந்து நேற்று கொழும்பு சோண்டர்ஸ் மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்த மேதினக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மனோகணேசன் மேலும் கூறுகையில்; பல கட்சிகளும் பல அமைப்புகளும் இன, மத பேதமற்று இந்த மேதினத்தை இங்கு நடத்துகின்றன என்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

உலக வரலாற்றில் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்றுதான் தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களின் தலைமைகளும் போராடிய வரலாறு உள்ளது. ஆனால் சம்பளத்தை உயர்த்திக் கொடு என்று போராடிய ஒருவருக்கு பொல்லாலும் கல்லாலும் அடித்த வரலாறு இலங்கையில்தான் உள்ளது.

ஆறுமுகன் தொண்டமான் என்னை ஏன் அடித்தார், தொழிலாளர்களின் உரிமைக்காக குரல் கொடுத்தமையினாலேயே இதுவரை நுவரெலியா மாவட்டத்தில் அவர் பல அரசியல் தலைமைகளை தாக்கியிருக்கலாம், அது நுவரெலியா மாவட்டத்துக்கு வெளியே வராமல் அமிழ்ந்து போயிருக்கக் கூடும், ஆனால் என்னை தாக்கியது தேசிய, சர்வதேச பிரச்சினையாக இன்று மாறியுள்ளது.

ஆறுமுகனது கோட்டை எனப்படுகின்ற பிரதேசம் இன்று சுக்குநூறாக நொருங்கிக் கொண்டிருக்கிறது. மக்களுக்காக கொழும்பிலிருந்து வந்து நீதி கேட்டுப் போராடிய மனோ கணேசனை தொண்டமான் அடித்து விட்டாரோ என்று அவருக்கு வாக்களித்த மக்களே இன்று மனம் வருந்தி திட்டி வருகின்றனர்.

ஆறுமுகன் போன்ற கொடுமைக்கார அரசியல்வாதிகள் அங்கம் வகிக்கின்ற மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை என்று வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோமோ, அன்றுதான் வடக்கு, கிழக்கு, மலையகம் என இந்த நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் ஒரு தீர்வு கிடைக்கும் என மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.

TAGS: