மணலாறில் சிங்கள குடியிருப்புகள்: ஆயிரக்கணக்கில் இராணுவம் குடியேற்றம்!

eelam29613cவட-கிழக்கு மாகாணத்தின் இதய பூமியான மணலாறில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை குடியமர்த்தி, புதிய சிங்களக் குடியிருப்புகளை உருவாக்கும் முயற்சியில் அரசாங்கம் மீண்டும் ஈடுபட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில், மணலாறு பிரதேசத்தில் கடந்த திங்கட்கிழமை, ரணவிரு பியச சம்பத்நுவர என்ற இராணுவத்தினருக்கான மாதிரிக் குடியேற்றக் கிராமத்தை உருவாக்குவதற்காக காணிகள் வழங்கப்பட்டுள்ளன.

இங்கு இராணுவத்தினரின் குடும்பங்கள் குடியேற்றப்பட்டு, புதிய சிங்களக் கிராமங்கள் உருவாக்கப்படுவதற்கான நடவடிக்கை இதன் மூலம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்ட சம்பத்நுவர இராணுவக் கிராமத்தில் 52 இராணுவக் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு 80 பேர்ச் காணித் துண்டுகளுக்கான உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவுக்கமைய வன்னிப் படைகளின் தலைமையகம் இந்தக் கிராமத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

இந்தக் கிராமத்தில் குடியேற்றப்படும் இராணுவத்தினரின் நலன் கருதி அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்கவும் கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

TAGS: