வன்னி முகாம்களை நிரந்தரமாக்க வேண்டும்- இராணுவத் தளபதி

eelam13713bவன்னிப்பிரதேசத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இராணுவப் படையணிகளுக்கென சொந்தமாகக் காணிகள் வழங்கி, அமைக்கப்பட்டுள்ள முகாம்களை நிரந்தர முகாம்களாக்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கிளிநொச்சிக்கு வெள்ளியன்று விஜயம் செய்து அங்குள்ள படையினர் மத்தியில் உரையாற்றிய இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்திருக்கின்றார்.

லெப்டினன் ஜெனரல் தரத்தில் இராணுவ தளபதியாக இருந்து இராணுவ பிரதானியாக ஜெனரல் தரத்தில் பதவி உயர்வு பெற்றுள்ள ஜகத் ஜயசூரிய அவர்கள், புதிய பதவியை அடுத்த மாதம் முதலாம் திகதி பொறுப்பேற்றுக்கொள்ளவுள்ளார்.

இந்த நிலையில் அவர் இன்று கிளிநொச்சியில் இரணைமடுவில் உள்ள மாவட்ட இராணுவ தலைமையகத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

அங்கு படையதிகாரிகள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான படையினர் மத்தியில் அவர் உரையாற்றியிருக்கின்றார்.

‘சமாதானப் பணிகளில் இராணுவத்தினர்’

அப்போது அவர் கூறியதாவது:

“யுத்த காலத்தில் மரங்களுக்கு மேலிருந்தும் காப்பரண்களிலிருந்தும் பணியாற்றிய பலர் இன்னும் இந்தப் பகுதிகளில் கடமையில் இருக்கின்றார்கள்.

அன்று யுத்தத்தில் ஈடுபட்டிருந்த படையினர் யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, கடந்த நான்கு வருடங்களாக சமாதான நடவடிக்கைகளிலும், அபிவிருத்தி மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளிலும் சிறந்த முறையில் பங்களிப்பு செய்து வருகின்றார்கள்.

யுத்தம் முடிவடைந்ததையடுத்து, இறுதி யுத்தத்தின்போது மனித உரிமை மீறல் சம்பவங்களில் ஈடுபட்டதாகவும், பல்வேறு சம்பவங்களில் சம்பந்தப்பட்டிருந்ததாகவும் இராணுவத்தினர் மீதும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

எனினும் அவற்றை சரியான முறையில் ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் எதிர்கொண்டிருந்தார்கள்.

யுத்தம் முடிவடைந்ததையடுத்து நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான பணிகளில் பயிற்சி பெற்று, படையினர் ஈடுபட்டு சிறந்த முறையில் பங்களித்து வருகின்றார்கள்.

பயங்கரவாத்திற்கு எதிரான யுத்தத்தில் சிறப்பாகச் செயற்பட்டதைப் போலவே சமாதான காலத்திலும் எமது படையினர் சிறந்த முறையில் செயற்பட்டு வருவது மகிழ்ச்சியளிக்கின்றது.

இந்தச் செயற்பாடு தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும்.”

TAGS: