போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்சவுக்கு மகுடம் சூட்ட இந்தியா துணை நிற்கிறது!- வைகோ

vaikoஇனப் படுகொலை செய்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச கொமன்வெல்த் நாடுகளின் தலைவர் பதவியை ஏற்பதற்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ எதிர்ப்பு தெரிவித்தார்.

தமிழ்நாடு, திருச்செங்கோட்டில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சியின் தேர்தல் நிதியளிப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலைக்கு இந்தியா துணை போனது. ராடர் மற்றும் ஆயுதங்களை இலங்கைக்கு அளித்து, இராணுவ அதிகாரிகளையும் கொடுத்து போரில் துணை நின்றது இந்தியா.

இந்த துரோகத்திற்கெல்லாம் உச்சகட்டமாக 54 நாடுகள் கொண்ட கொமன்வெல்த் நாடுகளுக்கு தலைவராக மகிந்த ராஜபக்சவை கொண்டு வர முயற்சிகள் நடைபெறுகின்றன.

இது இந்தியாவிற்கு நன்கு தெரியும். போர்க் குற்றவாளி மகிந்த ராஜபக்ச தலைவராகி விட்டால் நாம் எங்கே போய் முறையிடுவது.

கொமன்வெல்த் நாடுகளிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று நாம் குரல் கொடுக்கும் வேளையில், ராஜபக்சவுக்கு மகுடம் சூட்ட இந்தியா துணை நிற்கிறது.

தமிழ்நாட்டின் அரசியல் இப்படியே போய்விடாது. மாற்று அரசியலைத் தேர்வு செய்யும் நேரம் வரும். அப்போது பரிசீலனைக்கு உரியவராக நாம் இருக்குமாறு பாடுபட வேண்டும்.

நமது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க நாம் மக்களிடம் சென்று ஆதரவு திரட்டுவோம். ஆட்சி அதிகாரப் பதவிகளுக்கு வருவதில் தவறில்லை. ஆனால், அவற்றை மக்களுக்குத் தொண்டாற்ற கிடைக்கும் வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும்.

எனக்கு மிகவும் பிடித்தமான வேலை என்பது நாடாளுமன்றத்தில் நடக்கும் விவாதங்களில் கலந்து கொள்வதுதான். எவ்வளவோ பெரிய தலைவர்கள் இருந்தார்கள். அவர்களுக்குச் சமமாக என்னை நினைக்கவில்லை.

அவர்கள் மலை என்றால் நான் சிறு கூழாங்கல். அவர்களது அடிச்சுவட்டைப் பின்பற்றி நடப்பதில் மகிழ்ச்சி காண்பவன் நான் என்றார் வைகோ.

TAGS: