கைத்தொலைபேசியைக் கொண்டே பார்வைத் திறன் பரிசோதனை

test304தற்போது எல்லோர் கைகளிலும் காணக்கிடைக்கின்ற நவீன கைத்தொலைபேசிகளைக் கொண்டே கண்களைப் பரிசோதித்து பிரச்சினைகளை கண்டுபிடிக்க முடிவது சாத்தியமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

அது விரைவில் சாத்தியமாகும் என்பது போன்ற ஒரு கண்டுபிடிப்பை லண்டன் ஆராய்ச்சியாளர்கள் செய்துள்ளனர்.

ஆமாம், பார்வைத்திறன் பரிசோதனையை பலருக்கும் கொண்டுசேர்க்கும் விதமான கைத்தொலைபேசி அப்ளிகேஷன் ஒன்றை லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிக்கல் மெடிசினைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Portable Eye Examination Kit சுருக்கமாக PEEK என்று சொலப்படுகின்ற அப்ளிகேஷன் ஒன்றை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.

நவீன கைத்தொலைபேசிகளில் இருக்கும் காமெராக்களையும் ஃபிளாஷ்ஷையும் பயன்படுத்தி இந்த அப்ளிகேஷன் கண்ணின் விழித்திரையை ஸ்கேன் செய்கிறது.

தவிர ஒருவருடைய பார்வைத் திறனை அளக்க உதவும் சின்னதாகிக்கொண்டே போகும் எழுத்துக்களும் இந்த அப்ளிகேஷனில் உண்டு.

இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி ஒருவரது விழித்திரையையும் பார்வைத் திறனையும் சோதிக்கும்போது அந்த விவரங்கள் கைத்தொலைபேசியிலேயே பதியப்படுகின்றன.

அந்த விவரங்களை ஒரு மருத்துவருக்கு மின் அஞ்சல் செய்ய முடியும்.

பீக் அப்ளிகேஷனைக் கொண்டு கென்யாவில் பலருடைய கண்களைப் படமெடுத்து, அந்தப் படங்கள் லண்டனிலுள்ள மூர்ஃபீல்ட் கண் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.

மிக அதிக விலைகொண்ட கண் பரிசோதனைக் கருவிகளின் படங்களையும் இந்தப் படங்களையும் நிபுணர்கள் ஒப்பிட்டபோது கைத்தொலைபேசி எடுத்த படங்களைக் கொண்டும் கண் கோளாறுகளை ஓரளவுக்கு கண்டுபிடிக்க முடிந்தது.

இந்த ஆய்வு இன்னும் முழுமை அடையவில்லை என்றாலும், கைத்தொலைபேசி எடுத்த படங்களை வைத்து ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு ஏதோ ஒரு வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

உலக அளவில் 28 கோடிப்பேருக்கும் அதிகமானவர்கள் கண்பார்வை பாதிக்கப்பட்டோ இழந்தோ இருக்கிறார்கள் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

பெரும்பாலான கண் கோளாறுகள் எளிதில் குணப்படுத்தக்கூடிய பிரச்சினைகள்தான். பொருத்தமான கண்ணாடியை அணிவதாலோ புரை நீக்க சிகிச்சை மூலமாகவோ அவற்றை குணப்படுத்திவிட முடியும்.

ஏழை நாடுகளிலும்கூட பெருநகரங்களிலும் ஊர்களிலும் கண் மருத்துவர்கள் இருக்கின்றனர். ஆனால் ஏழை மக்களும் கிராமவாசிகளும் கண் மருத்துவர்களைச் சென்று பார்ப்பதில்லை.

உலகில் கண்பார்வை பாதிப்புள்ளவர்களில் 90 சதவீதம் பேர் ஏழை நாடுகளில் உள்ளனர்.

இந்தியா ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் கண் மருத்துவர்கள், கண் பார்வைத்திறன் பரிசோதகர்கள் போன்றோவர்களால் கொஞ்சம் பேருக்கேசேவை வழங்க முடிகிறது ஏனென்றால் குறைவானவர்களே இவர்களிடம் வருகின்றனர்.

அந்த வகையில் இந்த புதிய தொழில்நுட்பம் முன்னேற்றம் கண்டால் பெரிய பலன் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.