தமிழ் கூட்டமைப்பின் தேர்தல் கொள்கை அறிக்கை தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை! மகிந்த

tna_election_manifesto_006தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கொள்கை அறிக்கை தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக தேர்தல்கள் திணைக்கள ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கொள்கை அறிக்கை அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இராவணா சக்தி தன்னிடம் கோரியதற்கிணங்கவே அந்த கொள்கை அறிக்கை தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கொள்கை அறிக்கை பிரச்சினையானது என்று இராவணா சக்தி என்னிடம் முறையிட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேர்தல்கள் ஆணையாளரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சியல்ல என்பதனை முதலில் தெரிவித்து கொள்ள விரும்புகின்றேன்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியே ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சியாகும். எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்ட அரசியல் கூட்டமைப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

அந்தக் கட்சி பதியப்படும் போதே அக்கட்சியின் கொள்கை அறிக்கையை தேர்தல்கள் ஆணையாளர் கோருவார்.

தேர்தல் காலத்தில் அவ்வாறான கோரிக்கை எதுவும் விடுக்கப்படாது.

அதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கொள்கை அறிக்கை பிரதி எனக்கு கிடைக்கவில்லை. அதனை அவர்கள் எனக்கு வழங்கவேண்டிய தேவையுமில்லை.

எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கொள்கை அறிக்கை தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளேன் என்றார்.

தேர்தல் விஞ்ஞாபனத்தை அமுல்படுத்தும் சட்ட அதிகாரம் கூட்டமைப்பிற்கு கிடையாது

எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியீட்டினாலும், தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களை அமுல்படுத்தும் சட்ட அதிகாரம் கிடையாது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் ஏற்றுக் கொண்டதாக கருதப்பட்டாலும், அவற்றை அமுல்படுத்தும் சட்ட ரீதியான அதிகாரம் கிடையாது.

தேர்தல் காலத்தில் வெளியிடப்படும் தேர்தல் கொள்கை அறிக்கை உள்ளடக்கப்படும் வாக்குறுதிகளை எந்தவொரு கட்சியினாலும் நிறைவேற்ற முடியாது.

நாட்டின் அரசியலமைப்பிற்கு முரணான வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த விஞ்ஞாபனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சிலர் முயற்சித்து வருவதாக கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

TAGS: