நாவற்குழி காணிப்பிரச்சினை தொடர்பில் நீதிமன்றத்தை நாடப்போவதாக வடக்கு முதலமைச்சர் அறிவிப்பு!

vickkiயாழ்ப்பாணம் நாவற்குழியில் இராணுவம் சிங்களவர்களுக்கு காணிகளை பகிரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக வடக்கு முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாவற்குழியில் குடியேற்றப்பட்டுள்ள சிங்களவர்களுக்கு இராணுவம் காணிகளை பகிர்ந்தளித்துள்ளது.

இதனை மறைப்பதற்காக தமிழர்களுக்கும் காணிகளை பகிர்ந்தளிப்பதாக இராணுவத்தினர் கூறியுள்ளனர்.

இந்தநிலையில் காணிப்பகிர்வில் இராணுவத்தினர் ஈடுபடுவது சட்டத்துக்கு புறம்பான செயல் என்ற அடிப்படையில் நீதிமன்றத்தின் தலையீடு இல்லாமல் அதனை தீர்க்கமுடியாது என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாணசபையின் முதலாவது செயலமர்வின் போது அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

அரசாங்கக் காணிகளை வழங்குவது தொடர்பில் புதிய நடைமுறை அறிமுகம்

இலங்கையில் அரசாங்கக் காணிகளை வழங்குவது தொடர்பில் புதிய நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

காணியற்றவர்களுக்கு காணி வழங்கும் போது புதிய கொள்கைகள் பின்பற்றப்பட உள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட நபர் ஒருவருக்கு காணி உரிமை வழங்கும் முறைமைக்கு பதிலாக பலருக்கு நன்மை ஏற்படக் கூடிய வகையிலான திட்டமொன்று அமுல்படுத்தப்பட உள்ளது.

நாட்டில் நிலவி வரும் காணிப் பிரச்சினைக்கு தீர்வு வழங்க இந்த முறைமை வழியமைக்கும்.

குடும்பங்களுக்கு இடையில் நிலவி வரும் காணிப் பிரச்சினைக்கும் தீர்வு வழங்கப்படும்.

ஒரே காணியில் அடுக்கு மாடி வீடுகளை அமைத்து பலருக்கு நன்மைகளை வழங்க முடியும்.

புதிய முறைமையின் கீழ் காணியொன்றின் ஒவ்வொரு கட்டிட்டத்திற்கும் தனித் தனியாக உறுதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

காணி மற்றும் வீட்டு உரிமை தொடர்பான புதிய சட்டத் திருத்தம் குறித்த யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

நாவற்குழில் திட்டமிட்ட முறையில் குடியேற்றப்பட்டுள்ள சிங்கள மக்களுக்கு அளந்து கொடுக்கப்பட்டுள்ள காணிப் பங்கீடு குறித்து தமிழ் மக்களால் எழுப்பப்பட்ட சர்ச்சை தொடர்பாகவே இந்த அரச காணிகள் மீதான புதிய நடைமுறை என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

TAGS: