நீதி, நியாயம், சமதர்மம் ஆகியவை வழி அமைதியை வளர்த்து சுபிட்சத்தை மேலோங்கச் செய்வோம்

bdul-Khalid-Ibrahimசிலாங்கூர் மாநில மந்திரி புசார்  காலிட் பின் இப்ராஹிம், நவம்பர் 1, 2013.

  

வணக்கம். இவ்வினிய வேளையில் எல்லா மலேசியர்களுக்கும், குறிப்பாக இந்துக்களுக்கு, எனது தீபாவளி வாழ்த்துகளைக் கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 

மலேசிய இந்துக்களுக்கு தீபாவளி முக்கியப் பண்டிகையாகும். அறிவு, செழிப்பு, கல்வி, நீதி, தர்மம், வாழ்வு என்று ஒளியின் முக்கியத்துவத்தைப் பலவாராக வர்ணிக்கலாம். தீபாவளி இருள் என்னும் அதர்மத்தை ஒழித்து, ஒளி என்னும் தர்மத்தை மானிடர்களின் வாழ்வில் மலரச்செய்யும் நீதியைக் குறிக்க வல்லதாக இருப்பதே அதன் சிறப்பு.

 

இம்மாநிலத்தின் 53 லட்சம் மக்களில் 16 விழுக்காட்டினர் இந்தியர்கள். அவர்களில் பெரும்பாலானோர் இந்துக்களாகும். அந்த அளவுக்கு அவர்கள் மாநிலத்தின் வளர்ச்சியில், எதிர்காலத்தில், அரசியலில் முன்னேற்றத்தில் பங்குள்ளவர்கள்.

 

மொழியால், சமயத்தால், நிறத்தால், சிந்தனையால் நாம் வேறுபட்டாலும் மலேசியர்கள் என்ற இனத்தால் ஒன்று படுகிறோம். நீதி, நியாயத்தின்படி நடந்து சமதர்மத்துக்கு பாடுபட்டு நாட்டில் அமைதியை வளர்த்து சுபிட்சத்தை மேலோங்கச் செய்வோம்.

 

சிலாங்கூர் மாநில அரசு மக்களின் பலவிதப் பிரச்சனைகளுக்கும் தீர்வுக்கான பாடுபட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் ஆலயங்கள், பள்ளிகளின் மானிய மற்றும் நில விவகாரங்களுக்குத் தீர்வு காண்பதில் மட்டுமின்றி மக்கள் வாழ்வுக்கு ஏற்றம் தரும் எல்லா விவகாரங்களிலும் உதவுவதில் இம்மாநில அரசு நாட்டுக்கே முன்னோடியாக விளங்கிவருகிறது.

 

தீபாவளியை இந்து மக்களுடன் கொண்டாட இம்மாநில அரசு என்றும் தவறியதில்லை கடந்த 5 வருடங்களாக கிள்ளான், ஷா ஆலாம், பத்துமலை, ரவாங், பெட்டாலிங் ஜெயா, சிமிஞ்சேக், உலுசிலாங்கூர் மக்களுடன் இணைந்து மாநிலத் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்புகளை நடத்தியுள்ளோம், இவ்வருடமும் அதே போன்று திறந்த இல்லம் வருவேன். தீபாவளி வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்ள மக்கள் அனைவரும் திரண்டு வரவேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

 

நாட்டின் வளம் மக்களுக்கே, ஒளிரட்டும் மலேசியா, எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள். நன்றி.

 

 

TAGS: