சர்வதேச விசாரணை கோரி ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்படுவது உறுதி!

Suresh-Premachandraஇம்முறை ஜெனிவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் யுத்தக் குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேறும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்டீவன் ஜே ராப்பின் அறிக்கை ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மற்றும் ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழு அறிக்கைகள் இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றிருப்பதை உறுதிப்படுத்துவதாய் அமைந்துள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் ஸ்டீவன் ஜே ராப்பின் இலங்கை விஜயம் தொடர்பாக அமெரிக்க தூதரகத்தின் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள படங்கள் ஆக்கங்கள் குறித்து அமைச்சர் விமல் வீரவன்ச, மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் வெளியிடும் கருத்துகள் அவர்களது வாக்கு வங்கியைக் காப்பாற்றும் நடவடிக்கையாகும்.

சிங்கள பௌத்த இனவாதம் பேசிக் கொண்டு நாட்டின் பாதுகாப்புக்காக எனக்கூறி தமிழ் மக்களை அழிக்க நடவடிக்கைகளையே அவர்கள் முன்னெடுக்கின்றனர். உலக அரங்கில் இவர்களது பேச்சு எடுபடப் போவதில்லை.

ஐநா மனித உரிமைப் பேரவையும், அதன் ஆணையாளர் நாயகமும் இலங்கைக்கு இரணஒ்டு சந்தர்ப்பங்களை வழங்கியிருந்தும் இலங்கை அரசு அதனை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டிற்கு விஜயம் செய்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை இலங்கை அமுல்படுத்தா விட்டால் சர்வதேச விசாரணையை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் என எச்சரிக்கை விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

ஸ்டீவன் ஜே ராப்பின் இலங்கை விஜயம் அவரது நடவடிக்கைகள் குறித்து அரசும் அரசியல் கட்சிகளும் எவ்வாறான விமர்சனங்களை முன்வைத்த போதும் அமெரிக்கா அவரது அறிக்கையை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ளும்.

ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைக்கப் போகும் பிரேரணையில் ஸ்டீவன் ஜே ராப்பின் அறிக்கையிலுள்ள விடயங்களும் உள்ளடக்கப்படுவதால் இலங்கை அரசும் ஆளும் தரப்பிலுள்ள கட்சிகளும் அவரைப் பலவாறாக விமர்சித்து வருகின்றன. இந்த விமர்சனங்கள் சர்வதேச ரீதியில் எடுபடப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

TAGS: