ஐ.நா விசாரணைக் குழுவை நியமிக்க முன்னர் நவிபிள்ளை, பான் கீ மூனுடன் ஆலோசனை

navi_moon1இலங்கையில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கான ஐ.நா விசாரணைக் குழுவின் நியமனத்தை அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு முன்னதாக, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சந்தித்து ஆலோசிக்கவுள்ளார்.

ஜெனிவாவில் உள்ள இராஜதந்திரிகளை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த விசாரணைகளை மேற்கொள்வதற்கான விதிமுறைகளை உருவாக்குவதில் ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகம் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

விசாரணைக் குழு மற்றும் அதில் இடம்பெறுவோர் பற்றிய விபரங்கள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.

எனினும், திட்டமிட்டபடி அடுத்தமாதம் எந்த நேரத்திலும் இது தொடர்பான முறைப்படியான அறிவிப்பு வெளியிடப்படும்.

அதற்கு முன்னதாக, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனைச் சந்தித்து ஆலோசனை நடத்துவார் என்று ஜெனிவாவில் உள்ள இராஜதந்திரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், இது தொடர்பாக, இலங்கை அரசாங்கத்துக்கு ஜெனிவாவில் உள்ள வதிவிடப் பிரதிநிதி மூலமும் அறிவிக்கப்படும் என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது.

TAGS: