வடக்கு ஆளுநர் பதவி நீட்டிப்பு: ‘சர்வதேசத்திடம் முறையிடுவோம்’- ததேகூ

wigneswaran_rajapaksaவடக்கு மாகாணசபையின் ஆளுநராக முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறியின் பதவிக்காலத்தை நீடித்துள்ள அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

கடந்த காலங்களில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது, இராணுவத் தொடர்பில்லாத சிவில் அதிகாரி ஒருவரை வடக்கு மாகாண முதலமைச்சராக நியமிப்பதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்திருந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா கூறுகின்றார்.

வடக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கையையும் மக்களின் ஆணையையும் மதிக்காத அரசாங்கத்தின் நடவடிக்கையால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றும் மாவை சேனாதிராஜா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

வடக்கில் இராணுவத்தின் நில ‘ஆக்கிரமிப்பினையும்’ இராணுவத் தலையீட்டையும் எதிர்த்து பெருமளவிலான போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அதற்காக இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் உதவியையே நாடப்போவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கூறினார். -BBC

TAGS: