இந்தியாவுடன் ஒளித்து விளையாடும் இலங்கை

china_ship_001இலங்கையில் சீனாவின் இராணுவ பிரசன்னம் ஏதும் இல்லை என்று இந்தியாவிடம் மீண்டும் தலையில் அடித்து சத்தியம் செய்ய வேண்டிய நிலை இலங்கைக்கு உருவாகியிருக்கிறது.

சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங்கின் கொழும்பு பயணத்துக்கு முன்னதாக கொழும்புத் துறைமுகத்தில் சீனக் கடற்படையின் நீர் மூழ்கிக் கப்பல் ஒன்று தரித்த நின்ற விவகாரம் தான், இந்த நிலைமைக்கு முக்கிய காரணம்.

சீன நீர் மூழ்கிக் கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்த விபரத்தை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தாமல் மறைத்துக் கொண்டதால் தான் இந்த சிக்கல் இந்தளவுக்கு பூதாகர வடிவெடுத்தது.

கடந்த வாரம் இந்திய கடற்படைத்  தளபதி அட்மிரல் ஆர்.கே டோவனின் அழைப்பின் பேரில் இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா புதுடில்லிக்கு சென்றிருந்தார்.

அவர் புதுடில்லியில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெட்லி ,இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் டோவன் ஆகியோரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது சீன நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பு துறைமுகம் வந்ததை ஒப்புக்கொண்டார்.

சீன கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பு துறைமுகம் வந்ததை இலங்கை சார்பாக முதன் முறையாக ஒப்புக்கொண்டவர் அவர்தான்.

கடந்த செப்டெம்பர் 7ம் திகதி தொடக்கம்,14ம் திகதி வரை சீன கடற்படையின் சொங் 039 வகை  நீர்மூழ்கி கொழும்புத் துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் தரித்து நின்றிருந்தது.

இந்த நீர்மூழ்கியின் வருகை குறித்து இலங்கை கடற்படையோ, அரசாங்கமோ ஊடகங்களுக்கும் எதையும் கூறவில்லை.இந்தியாவுக்கும் கூறியதாக தகவல் இல்லை.

ஆனால் அந்த நீர் மூழ்கி கொழும்பில் இருந்து புறப்படும் நேரத்தில் தான் ,உள்ளூர் ஊடகங்கள் அந்த செய்தியை வெளியிட்டன.

ஆனால், அதற்கான ஆதாரங்கள் சரியாக வெளியாகவில்லை. பின்னர், சீன நீர்மூழ்கி அதற்கு துணையாக பயணிக்கும் விநியோக கப்பல் ஆகியவை கொழும்பில் தரித்து நிற்கும் படங்கள் வெளியாகின.

இந்த சர்ச்சை உருவாகி கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் கழித்து இலங்கை அரசாங்கத்தின் தரப்பில் இருந்து, சீன நீர்மூழ்கி கொழும்புக்கு வந்தது உண்மை தான் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால்,இந்த விவகாரம் சூடுபிடித்த போது கடந்த செப்டம்பர் 25ம் திகதி பீஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேர்ணல் ஜெங் யன்ஷெங், கொழும்புத் துறைமுகத்தில் சீன நீர்மூழ்கி தரித்து நின்றது உண்மையே என்றும, அது சோமாலியா செல்லும் வழியில் ,விநியோகத் தேவைக்காக கொழும்பு துறைமுகத்தை நாடியதாகவும் தெரிவிதிருந்தார்.

இதற்கு நீண்ட நாள் கழித்தே கடந்த மாதம் 27ம் திகதி தான் புதுடில்லியில் இலங்கைக் கடற்படைத் தளபதி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

கொழும்புக்கு வந்தது அணுவாயுத நீர் மூழ்கியல்ல.அது சாதாரணமான டீசலில் இயங்கும் நீர் மூழ்கிதான் .இந்தியாவுடன் நாம் சமரசம் செய்து கொள்ளமாட்டோம். இந்தியாவின் பாதுகாப்பு எமது பாதுகாப்பு .சீனர்கள் மட்டுமல்ல, ரஷ்யர்கள் மற்றும் ஏனைய நாடுகளுடனும் நாம் உறவுகளை வைத்துள்ளோம், எமது நாடு அணிசேரா நாடு.

அவர்கள் நல்லெண்ணப் பயணமாகவே வருகிறார்கள். நீங்கள் கூறுவது போல சீன இராணுவ தலையீடு எதுவும் அங்கு இல்லை. அவர்கள் வர்த்தக நலன் மீதே ஆர்வம் கொண்டுள்ளனர் என்று  இந்தியக் கடற்படைத் தளபதியை அருகில் வைத்துக் கொண்டே கூறியிருந்தார் வைஸ் அட்மிரல் ஜயந்த  பெரேரா.

சீன நீர்மூழ்கி விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்த பின்னர் இந்தியப் பாதுகாப்பு செயலர் ஆர்.கே.மாத்தூர் தலைமையில் குழு கொழும்பு வந்தது.

பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய  ராஜபக்சவும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேராவும் அடுத்தடுத்து புதுடில்லிக்கு அழைக்கப்பட்டனர்.

இதன் போது,சீன நீர்மூழ்கிக் கப்பலில் வருகை குறித்து இந்தியா தனது அதிருப்தியையும் கவலையையும் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருந்தாலும் இந்தியாவின் கவலையை இலங்கை எந்தளவுக்கு புரிந்து கொண்டுள்ளது? என்பது கேள்வி.

ஏனென்றால் ,இலங்கைக் கடற்படைத் தளபதி புதுடில்லியில் இதபற்றிப் பேசும் போது,சீன நீர் மூழ்கி பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு மிக சாதாரணமாகவே அது அணுவாயுத நீர் மூழ்கி தான் என்று மிக அலட்சியமாகப் பதில் கொடுத்திருக்கிறார்.

அணுவாயுத நீர் மூழ்கியா? சாதாரண நீர் மூழ்கியா?கொழும்பு வந்தது என்பது பிரச்சினையல்ல.

வந்தது சீன நீர் மூழ்கி தான் என்பதே பிரச்சினை. அதைப்பற்றி வெளிப்படையாகக் கூறாமல் மறைத்தது தான் பிரச்சினை.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரானியக் கடற்படையின் நீர் நீர் மூழ்கி ஒன்று கொழும்புத் துறைமுகத்திக்கு வந்து சென்றது.

அந்த நீர் மூழ்கி ஈரானிலிருந்து புறப்பட முன்னரே அது கொழும்புக்கு செல்லும் என்று ஈரான் அறிவித்துவிட்டது.

அதனால் அதன் வருகை குறித்து எந்த நாடும் கேள்வியெழுப்பவில்லை. சந்தேகத்தையோ சர்ச்சையையோ கிளப்பவில்லை.

ஆனால் ,அது போன்ற வெளிப்படைத்தன்மையுடன் சீன நீர் மூழ்கி கொழும்பு வந்திருக்கவில்லை. அதன் வருகை உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் சீனா மட்டுமல்ல இலங்கையும் கூட ஒளித்து மறைத்துப் பாதுகாத்தது.

இது தான் ,இந்தியாவுக்கு தனது பாதுகாப்புக் குறித்து சந்தேகம் எழுந்ததற்கு காரணம்.

இந்தியாவின் பாதுகாப்பு எமது பாதுகாப்பு என்றும், இந்தியாவின் பாதுககாப்பில் சமரசம் செய்து கொள்ளமாட்டோம் என்றும் இப்போது கூறும் இலங்கை கடற்படைத்  தளபதி , சீன நீர் மூழ்கியின் வருகையின் போது  மட்டும் அதனை மறந்து போயிருந்தார்.

இந்தியப் பெருங்கடலில் சீன நீர்மூழ்கியின் நடமாட்டத்தை இந்தியா எச்சரிக்கையுடன் பார்க்கிறது என்பதை தெரிந்து கொண்டே அவற்றில்  ஒன்று கொழும்பு வந்ததை மறைத்திருந்தது அரசாங்கம்.

தெற்காசியத் தறைமுகம் ஒன்றில் சீன நீர் மூழ்கி ஒன்று தரித்துச் சென்றதுதான் விவகாரமே தவிர ,அது எந்த வகையை சேர்ந்தது என்பதல்ல பிரச்சினை.

மீண்டும் மீண்டும்  இலங்கை அரசு பொருந்தாத நியாயத்தின் மூலம் ,இந்த விவகாரத்தில் தனது தவறை தட்டிக்கழிக்கவே முனைகிறது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா இந்தியப் பயணத்தில் இருந்த போது, கடந்த 29ம் திகதி கொழும்பில் பாதுகாப்பு அமைச்சு நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதும் சீன நீர்மூழ்கியின் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்திருந்த ,கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுல சூரிய,

இந்தியப் பெருங்கடலில் மத்தியில் இலங்கை அமைந்துள்ளதால் ,பூகோள ரீதியில் கேத்திர முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.

இதனால் பல்வேறு நாடுகளில் கடற்படை கப்பல்களும் நீர்மூழ்கி கப்பல்களும் நல்லெண்ண அடிப்படையில் வந்து செல்கின்றன.இது பொதுவான விடயம்.

குறித்த நாடொன்றில் கப்பல்கள் மட்டும் இங்கு வரவில்லை.

நாடு எது என்பதை விட நாடுகளுக்கு இடையிலான நல்லெண்ண உறவுகளை பலப்படுத்துவது தொடர்பிலேயே கவனம் செலுத்தப்படும்.

2010ம் ஆண்டுக்குப் பின்னர், இன்று வரை 206 வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் இங்கு வந்து சென்றுள்ளன.

இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, அவுஸ்திரேவியா, ரஷ்யா, ஜப்பான், ஸ்பெய்ன், பங்களாதேஷ், இந்தோனேஷிளா, தாய்லாந்து, துருக்கி. மலேஷியா, தென்கொரியா, புருணை, மாலைதீவு, இத்தாலி, பிரான்ஸ், ஈரான், சீனா, ஐக்கிய அரபு இராச்சியம், ஓமான், சீஷெல்ஸ் மற்றம் நைஜீரியா ஆகிய நாடுகளிலிருந்தே இந்த 206 கப்பல்களும் வந்து சென்றுள்ளன.

2010 ஆம் ஆண்டில் 36 கப்பல்களும், 2011ஆம் ஆண்டில் 49 கப்பல்களும், 2012 இல் 34 கப்பல்களும், 2013 இல் 48 கப்பல்களும், 2014 ஆம் ஆண்டு இதுவைரை 39 கப்பல்களும் வந்து சென்றுள்ளன என்று விளக்கம் கூறியிருந்தார்.

அதாவது ,வந்தது சீன நீர்மூழ்கி என்பதற்கு முக்கியத்துவம் அளிக்காமல்,கடந்த ஐந்து ஆண்டுகளில் கொழும்புக்கு வந்த 206 போர்க்கப்பல்களில் உன்றாகவே இதனையும் பார்க்க  வேண்டும் என்று அவர் விவகாரத்தை திசை திருப்ப முயன்றார்.

ஆனால், இந்தியா அப்படிப் பார்க்கவில்லை.

தனது செல்வாக்கிற்கு உட்பட்ட பகுதிக்குள் இதுவரையில்லாத வகையில் சீன நீர்மூழ்கி வந்து சென்றதை அச்சுறுத்தலாகப் பார்க்கிறது.

இந்தியாவின் இடத்தில் இலங்கை இருந்திருந்தால், இதையேதான் செய்திருக்கும்.

ஒரு பக்கத்தில், சீன நீர்மூழ்கிகளுக்கு இடம்கொடுக்கும் விவகாரத்தில் இந்தியாவின் கவலையைப் புரிந்து கொள்வது போலத் தலையாட்டினாலும், இன்னொரு பக்கத்தில், அதனை நியாயப்படுத்தும் வகையிலும் ,இலங்கை அரசாங்கம் நடந்து கொள்கிறது.

சீனாவின் இராணுவ பிரசன்னம் ஏதும் இலங்கையில் கிடையாது என்றும்,இலங்கையில் வெறும் ஐந்து சீனப்படையினர் தான் உள்ளனர் என்றும் அவர்கள் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் கல்வி கற்கின்றனர் என்றும் ,சாமர்த்தியமாக பதிலளிக்கிறார் பிரிகேடியர் ருவான் வணிக சூரிய.

இலங்கையில்,சீனாவின் இராணுவ தலையீடுகளும், பொருளாதார தலையீடுகளும் அதிகரித்து விட்டன என்ற இந்தியாவின் கவலையை இலங்கை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே தெரிகிறது.

ஏற்கனவே, சீனக்குடாவில், சீன விமான நிலையத்துக்கு, விமானப் பராமரிப்பு நிலையத்தை அமைக்க இடம்கொடுக்க முயன்ற விவகாரத்திலும், இலங்கையை இந்தியா கண்டித்திருந்தது.

இதையடுத்து, இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காரியத்தையும் செய்யமாட்டோம் என்று வாக்குறுதி அளித்திருந்தார் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா புதுடில்லியில் எதனைக் கூறினாரோ அப்படியே பீரிஸீம் கூறியிருந்தார்.

இந்தியாவின் எதிர்ப்பையடுத்து,சீனக் குடாவில் அமைக்கப்படவிருந்த விமானப் பராமரிப்பு நிலையத்தை ஹிங்குராங்கொடவுக்கு மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஆனால் சீனா அதற்கு இணங்கிவிட்டதாக எந்த தகவலும் இல்லை.

அந்த விவகாரம் ஓய்ந்து ஓரிரு மாதங்களுக்குள்ளாகவே நீர்மூழ்கி விவகாரத்தில் இந்தியாவுக்கு பதிளிக்க வேண்டிய நிலைக்கு இலங்கைக்கு உருவாகியிருக்கிறது.

ஒருபக்கத்தில் இந்தியாவை நட்பு நாடு என்று கூறிக் கொண்டாலும்,அதன் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்க இடமளிப்போம் என்று கூறிக் கொண்டாலும், மறுபக்கத்தில் சீனா விடயத்தில் இலங்கை ஒளிந்து விளையாடுகிறது என்பதே உண்மை.

புதுடில்லியில் நரேந்திர மோடி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், சீனா விடயத்தில் இலங்கை இரண்டாவது முறையாகவும் இந்தியாவின் கிடுக்குப் பிடிக்குள் அகப்பட்டுக் கொண்டுள்ளது.

சீனா விடயத்தில் .இந்தியாவுடன் வெளிப்படைத்தன்மையான உறவை கடைப்பிடிக்கத்தவறினால்,இது போன்ற நெருக்கடிகளுக்குள் சிக்கிக் கொள்ள நேரிடும் என்பதையே இவை எடுத்துக் காட்டியுள்ளன.

-சுபத்ரா

TAGS: