பூனையாக பதுங்கிய வடமாகாண சபை புலியாக மாறிவிட்டது: ஞானசார தேரர்

galagoda_thero_004இனவாத பிரிவினைக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் வட மாகாண சபையும் முயற்சிப்பதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

நேற்று நடைபெற்ற பொதுபல சேனா அமைப்பின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வட மாகாண சபையின் செயற்பாடுகள் அண்மைக் காலங்களில் மிகவும் மோசமானதாகவுள்ளன.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் வட மாகாண சபையும் இனவாத பிரிவினைக்கு முயற்சிக்கின்றது என்பது அண்மையில் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் மூலம் தெரிவந்துள்ளது.

கடந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் வட மாகாணத்தை சரியாக கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தார்.

யுத்தத்தை வென்றவுடன் வடக்கிற்கு உரிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுடன் நாட்டின் நிலைமைகள் மீண்டும் பின்நோக்கி நகர்கின்றன. 2002ஆம் ஆண்டில் நாடு எவ்வாறானதொரு அரசியல் சூழ்நிலையில் இருந்ததோ அவ்வாறானதொரு நிலைமை தற்போது மீண்டும் உருவாகி வருகின்றது.

அன்று மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியின் ஆட்சியில் பூனைகள் போல் பதுங்கி கொண்ட வட மாகாண சபை இன்று மீண்டும் புலிகளாக மாற ஆரம்பித்து விட்டது.

வடமாகாண சபையில் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானமானது இலங்கைக்கு மிகவும் அச்சுறுத்தலான ஒன்றாகும். இவ்விடயத்தினை சாதாரணமாக எடுத்துக்கொண்டால் நாடு பாதாளத்தின் பக்கமே கொண்டு செல்லப்படும்.

வட மாகாண சபையின் இனப்படுகொலை தொடர்பில் பிரேரணை கொண்டுவரப்பட்டமை சர்வதேசத்தினை மகிழ்விக்கவேயாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் அமைதி காக்கின்ற நிலையில் கூட்டமைப்பின் தலைமையில் இருந்து சம்பந்தனை ஓரங்கட்டிவிட்டு சி.வி.விக்னேஸ்வரனை கூட்டமைப்பின் தலைவராக்கும் முயற்சிகள் சர்வதேச மற்றும் புலம்பெயர் புலி அமைப்புகளினால் முன்னெடுக்கப்படுகின்றது.

இன்னும் சிறிது காலத்தில் இது நடந்தே தீரும் என அவர் மேலும் தெரிவித்தார்.

-http://www.tamilwin.com

வட மாகாண சபையின் தீர்மானம் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது: ஜே.வி.பி

வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என ஜே.வி.பி கட்சி அறிவித்துள்ளது.

வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச போர்க்குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டுமென வட மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை தேசிய ஒற்றுமையை பாதிக்கும் விடயமாகும்.

இந்த நடவடிக்கையை ஓர் இனவாத செயற்பாடாகவே நோக்கப்பட வேண்டும்.

மக்கள் தேசிய ஒற்றுமையை விரும்பி நிற்கும் நிலையில் இனவாத சக்திகள் மீளவும் நாட்டை இருண்ட யுகத்திற்கு இட்டுச் செல்ல முயற்சித்து வருகின்றன.

புதிய அரசியல் கலாச்சாரத்தை புரிந்து கொள்ளாமலோ அல்லது வேண்டுமென்றேயொ இவ்வாறு சில தரப்பினர் இனவாத அடிப்படையில் செயற்படுகின்றனர்.

பல்வேறு வழிகளில் தோன்றியுள்ள இனவாத சக்திகளை மக்கள் தெளிவாக அடையாளம் கண்டு கொள்ள வேண்டுமென ஜே.வி.பி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

–http://www.tamilwin.com

TAGS: