இறுதிப் போரில் கொல்லப்பட்டோருக்கு அமெரிக்கா சார்பில் முள்ளிவாய்க்காலில் இறுதி வணக்கம்

சிறிலங்காவில் இறுதிக்கட்டப் போர் நடந்த முள்ளிவாய்க்காலில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச்செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி நேற்று உயிரிழந்த இருதரப்பினருக்காகவும் மலர் தூவி இறுதிவணக்கம் செலுத்தினார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச்செயலர், ரொம் மாலினோவ்ஸ்கி சிறிலங்காவில் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

நேற்று அவர் முல்லைத்தீவுக்குச் சென்று, ஆயிரக்கணக்கான பொதுமக்களும், விடுதலைப் புலிகளும், சிறிலங்கா படையினரும் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் கரையோரத்தில் நடந்து சென்றார்.

முள்ளிவாய்க்காலில், பாரா கப்பல் தரைதட்டி நின்ற பகுதியில், கரையோரத்தில், மலர்களைத் தூவி, உயிரிழந்தவர்களுக்கு அவர் இறுதி வணக்கம் செலுத்தினார்.

போரில் கொல்லப்பட்ட இரண்டு தரப்பினருக்காகவும் தாம், அமெரிக்காவின் சார்பில் இறுதி வணக்கம் செலுத்தியதாக அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அந்த இடத்துக்குச் சென்ற போது தாம் உணர்வுபூர்வமான நிலையை அடைந்ததாகவும், போரில் உயிரிழந்த இரண்டு தரப்பினருக்காகவும் அமெரிக்காவின் சார்பில் இறுதி வணக்கம் செலுத்தியதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

-http://www.pathivu.com

TAGS: