அரசியல் கைதிகளின் விடுதலை ஐந்தாம் ஈழப்போரின் ஆரம்பம்! குணதாச அமரசேகர

gunadasa_amarasekara001சிறைகளில் இருக்கும் விடுதலைப் புலிகளை விடுவித்தால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஈழத்திற்கான போராட்டம் மீண்டும் ஐந்தாம் ஈழப்போராக உருவெடுக்கும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

நீண்டகாலமாக தடுப்புக்காவலில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில்,

அது குறித்து மஹிந்த ஆதரவு அணியின் முக்கிய அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்:

கடந்த மூன்று தசாப்தகால யுத்தத்தை மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவந்தது.

ஆனால் சர்வதேச மட்டத்தில் இந்த போராட்டமும் தமிழீழத்துக்கான முயற்சிகளும் இன்னும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அவ்­வாறு இருக்கையில் புலிகளுடன் தொடர்புடைய நபர்களை முன்னைய அரசாங்கம் கைது செய்து தடுத்து வைத்திருந்தது.

அவர்கள் மூலமாக சர்வதேச மடத்தில் இயங்கும் புலி உறுப்பினர்களை அடையாளம் காணவும் திட்டம் இருந்தது.

ஆனால் இப்போது இந்த நபர்களை அரசியல் கைதிகள் என்ற பெயரில் விடுவிக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளமை சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களை விடுவித்து நாட்டில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்த அரசாங்கமே முயற்சிக்கின்றது. இவர்களை விடுவித்தால் இவர்­களின் மூலமாக சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் மீண்டும் இலங்கையில் இயங்க ஆரம்பிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

சர்வதேச மட்டத்தில் புலிகள் பலமாக இயங்கி வருகின்ற நிலையில் அவர்கள் மீண்டும் நாட்டை பிரிக்கும் வேலையை ஆரம்பிப்பார்கள் என்ற அச்சம் இன்றும் உள்ளது.

எனினும் இவை அனைத்தையூம் தடுக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை. புலம்பெயர் அமைப்புகளின் ஆதரவிலும் மேற்கத்தேய நாடுகளின் ஆலோசனையிலும் இந்த அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

ஆகவே அவர்களுக்கு விசுவாசமான வகையில் அரசாங்கம் இங்கு செயற்பட்டு வருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

-http://www.tamilwin.com

TAGS: