தமிழ் மக்களின் அரசியல் சரித்திரத்தில் 2016 முக்கியமான ஆண்டாக இருக்கும்: சம்பந்தன்

Sampanthanதமிழ் மக்களின் அரசியல் சரித்திரத்தில் 2016ஆம் ஆண்டு அதிமுக்கியமான ஆண்டாக இருக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அகில இலங்கை இந்து மாமன்றத்தின் 60வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதாவது, “எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு, தமிழ் மக்களின் அரசியல் சரித்திரத்தில் அதிமுக்கிய ஆண்மாக இருக்குமென நான் நம்புகின்றேன். இந்த நாட்டில் நீண்டகாலமாக நடைபெறாத பல செயற்பாடுகள் நடைபெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கான நிலைமை தற்போது உருவாகியுள்ளது.

தமிழர்களின் பிரச்சினை இன்று உள்நாட்டு பிரச்சினை மட்டுமல்ல சர்வதேச பிரச்சினையாகும். இது முன்னொரு போதும் இல்லாத அளவு சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு உட்பட பல நாடுகள் செயற்படுகின்றன. உண்மை நிலை உணரப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் வழங்கப்பட வேண்டும் இவ்வாறான சம்பவங்கள் இனி ஒருபோதும் நடைபெறக்கூடாது என்பது தொடர்பில் சர்வதேசம் உறுதியாகவுள்ளது. இவ்வாறான நிலையில் நாங்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். எமக்குள் இருக்கும் பிரச்சினைகளை நாங்கள் பேசித் தீர்த்துக் கொள்ள முயலவேண்டும்.” என்றுள்ளார்.

-http://www.puthinamnews.com

TAGS: