வெளிநாடுகளிலிருந்து யாழ்.வருவோராலேயே பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிப்பு!

jaffnaaஇலங்கை கடற்பரப்பில் சண்டித்தனம் காட்டும் இந்தியா, பாகிஸ்தான் கடற்பரப்பில் அணுவாயுதத்திற்கு பயந்து அத்துமீறுவதில்லை என ஜே.வி.பி. எம். பி. பிமல் ரத்னாயக்க நேற்று சபையில் தெரிவித்தார்.

வெளிநாடுகளிலிருந்து யாழ். குடா நாட்டுக்கு விடுமுறைக்காக வருவோரால் “பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்” அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் முன்வைத்த வடக்கு, கிழக்கு நிலைமைகள் தொடர்பாக சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே ஜே.வி.பி. எம்.பி. பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

காணாமல் போனோருக்கான – காணாமல் போனவர்கள் சான்றிதழ் வழங்கும் பிரேரணையை பாராளுமன்றத்தில் முன்வைத்து அதனை நிறைவேற்ற அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இதன் மூலம் வடக்கில் யுத்தத்தால் தமது உறவுகளை தொலைத்து தவிப்பவர்களின் சட்டப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு ஏதுவாக அமையும்.

அத்தோடு இவ்வாறானவர்களுக்கு நஷ்ட ஈடுகளை பெற்றுக் கொள்வதற்கும் உதவியாக அமையும். யுத்தத்தில் விடுதலைப் புலிகள் உயிரிழந்துள்ளனர். அவர்களது பெற்றோருக்கும் அவர்களை நினைவு கூருவதற்கும் உரிமையுண்டு.

அதேபோன்று தமிழ், சிங்கள, முஸ்லிம்கள் என வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் யுத்தத்தால் மக்கள் மரணித்துள்ளனர்.

எனவே மே 19 ஆம் திகதி இவர்கள் அனைவரும் தமது உயிரிழந்த உறவுகளை நினைவு கூறுவதற்கு பொதுவான நினைவு ஸ்தூபி ஒன்று நிர்மாணிக்கப்பட வேண்டும். அதேவேளை இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் பலாத்காரமாக அத்துமீறி மீன் வளங்களை கொள்ளையடித்து செல்கின்றனர்.

ஆனால் இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் கடல் எல்லைக்கு செல்வதில்லை. ஏன் அச்சம். அவ்வாறு கடல் எல்லை தாண்டும் போது எச்சரிக்கை சமிக்ஞை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் அணுவாயுதங்களுக்கு பயந்து இந்தியா அங்கு சண்டித்தனம் காட்டுவதில்லை.

ஆனால் இலங்கைக்கு தான் சண்டித்தனம் காட்டுகிறார்கள். இன்று விடுமுறைக்காக அதிகளவில் வெளிநாடுகளிலிருந்து யாழ். குடாநாட்டுக்கு பெரும்பாலானோர் வருகின்றனர்.

வெளிநாடுகளிலிருந்து யாழ். குடா நாட்டுக்கு விடுமுறைக்காக வருவோரால் “பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்” அதிகரித்துள்ளன.

பாடசாலை மாணவிகளிடத்திலும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இது தொடர்பில் கவனம் செலுத்தி தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார்.

-http://www.tamilwin.com

TAGS: