இந்தோனேசிய தமிழ் அகதிகள் விவகாரம்: புரிந்து கொள்வது எப்படி?

eelam_rafugees1இந்தோனேசிய கடற்பரப்பில் இனஅழிப்பிலிருந்து தப்பி தம் உயிரை காக்க போராடும் தமிழ் ஏதிலிகள் விவகாரம் மனதை உலுக்குகின்றது. இது முதற் தடவையல்ல.. பல தடவை இந்த அவலத்திற்கு தமிழர்கள் முகம் கொடுத்தே வந்துள்ளனர்.

பல நூற்றுக்கணக்கனவர்களை நாம் இந்த கடற்பயணங்களின் போது இழக்கவும் நேரிட்டிருக்கிறது.

2009 மே 18 இற்கு பிறகு இந்த அகதிகள் எவ்வாறு எதிர்கொள்ளப்படவேண்டும் என்றும் இவர்கள் அனைவரும் ”இனப்படுகொலையில் இருந்து தப்பியவர்கள்” மற்றும் இவர்களுக்கு சம்பந்தப்பட்ட நாடுகள் “கூட்டு அரசியல் தஞ்சம்” வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நாம் செய்த ஆய்வை மையப்படுத்தி நிறைய இடங்களில் பேசியும் எழுதியும் முடித்தாகிவிட்டது.

ஆனால் அனைத்துலக சமூகத்தையும் மற்றவர்களையும் விடுவோம். எம்மவர்களே இதை இன்னும் புரியாததன் விளைவுதான் இந்த அனர்த்தங்கள் தொடர்வதற்கு காரணமாகும்.

இது எம்மவர்கள் தொடர்பான மனிதாபிமான பிரச்சினை என்பது ஒரு புறம் இருக்க எமது அடுத்த கட்ட போராட்டத்தின் ஒரு சிறப்பான – சாத்தியமான ஒரு வடிவமும் கூட என்பதை நம்மவர்கள் புரியாதது துரதிஸ்டவசமானது.

எமது ஆய்வின் முடிவுகள் இனப்படுகொலையைச் சந்தித்த ஒரு இனத்தின் இருப்பு தொடர்பான மிக முக்கியமான கருத்துருவாக்கங்கள் அவை. மே 18 இற்கு பின்னான தமிழர் அரசியல் இருப்பு தொடர்பாக நாம் ஆய்வு செய்தபோதுதான் இந்த “கூட்டு அரசியல் தஞ்சம்” என்ற பதத்தை கண்டடைந்தோம்.

புலம் பெயர் தமிழ் சமூகம், அகதிகளின் தொடர் வருகை என்ற கூட்டிணைவு சிறீலங்காவில் எமது அரசியல் இருப்பு தொடர்பாக சில காத்திரமான செய்திகளை சர்வதேசத்தில் பதிவு செய்யும் என்பதை நாம் முன்பே கண்டடைந்தோம்.

சிறீலங்கா என்ற தேசத்திற்குள் எமக்கான தனித்துவமான அரசியலை செய்ய முடியாது என்ற பதட்டத்துடன் இருந்தபோதே இந்த கருத்துருவாக்ங்கள் எமக்கு நம்பிக்கையளிக்கும் ஒன்றாக இருந்தது.

பூகோள அரசியலின் “கஸ்டடிக்குள்” வந்திருக்கிற சிறீலங்காவை மிரட்டும் சக்திகளாக – மேற்குலகின் துருப்பு சீட்டுக்களாக புலம்பெயர் தமிழ் சமூகமே இருக்கிறது.

இந்த அடிப்படையில் பெருந்தொகையான எண்ணிக்கையில் அகதிகளாக தமிழர்கள் புலம்பெயர்வது சிறீலங்காவை பெரும் அச்சத்திற்குள் தள்ளியிருக்கிறது.

அப்போதே நாம் கூறினோம். கடல்வழி பயணங்கள் தொடரும் என்று.. அத்தோடு முள்ளிவாய்க்கால் படுகொலைகளின்போது மெனளமாக இருந்த சர்வதேச சமூகத்திற்கு ஒரு வகையான நெருக்கடியை கொடுக்கும் செயற்பாடு இது. இதுவும் ஒரு வகையான போராட்டவடிவம்தான்.

ஆனால் தமிழ் ஊடகங்களோ – அரசியற்செயற்பாட்டாளர்களோ இதை உணர மறுக்கிறார்கள் அல்லது அடம்பிடிக்கிறார்கள்.

ஊடகங்கள் குழுவாத – குண்டுசட்டி அரசியலை ஓரங்கட்டிவிட்டு கால நீரோட்டத்தில் கலந்துகொண்டு சர்வதேச அரசியலில் தமிழர் தரப்பை ஒரு பேசும் சக்தியாக மாற்ற உழைக்க வேண்டும். இந்த அகதிகள் பிரச்சினையை ஒரு ஆயுதமாக நாம் கையிலெடுக்க வேண்டும்.

குறிப்பாக அவுஸ்திரேலிய மற்றும் கனடா வாழ் தமிழர்கள் இந்த பிரச்சினையை பன்முகப்படுத்த முடியும்.

தற்போது கூட சம்பந்தபட்ட நாட்டின் அதிகாரிகளுடன் எமது கருத்துருவாக்கங்களை முன்வைத்து யாரும் வாதாடுவதுபோல் தெரியவில்லை.

இது தொடர்பாக பேசும் நிறுவனங்களுக்ஞ சட்டத்தரணிகளுக்கு இப்படியான கருத்துக்கள் சமூகத்தில் உள்ளன என்றாவது தெரியுமா என்பதும் சந்தேகமே.!

எத்தனை முறை இன்னும் பதிவு செய்யப்போகிறோமோ தெரியவில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் இதை பதிவு செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம்.

இரண்டு கருத்துருவாக்கங்கள் முதன்மைப்படுத்தப்பட வேண்டும். ஒன்று அவர்கள் அனைவரும் “இனப்படுகொலையில் இருந்து தப்பியவர்கள்”.

இரண்டு அவர்களுக்கு “கூட்டு அரசியல் தஞ்சம்” வழங்கப்படவேண்டும். ஏன் என்பதற்கான விளக்கத்தைத்தான் எமது ஆய்வில் விளக்கியிருக்கிறோம்.

முள்ளிவாய்க்காலில் உண்மையில் நடந்தது உயிர்களின் பலியெடுப்பு அல்ல. முள்ளிவாய்க்காலில் மனித உயிர்களுக்கும் அப்பால் இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற அடையாளங்கள் மீதான அழித்தொழிப்பே நடைபெற்றது.

இந்த அடையாளங்களை தாங்கியவர்களாக, அந்த அடையாளங்களை தக்க வைப்பதற்காக முன்னின்று போராடியவர்களுக்கு தோள்கொடுத்ததற்காக அந்த மக்கள் அந்த நிலத்தில் வைத்தே அழித்தொழிக்கப்பட்டார்கள்.

எஞ்சியவர்கள் முடமாக்கப்பட்டு முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். தப்பியவர்கள்தான் இன்று ஒன்று சேர்ந்து குழுக்களாக பல முனைகளினூடாக அரசியல் தஞ்சம் கோரத் தொடங்கியிருக்கிறார்கள்.

யார் என்ன வியாக்கியானம் கூறினாலும் தஞ்சம் கோரியிருப்பவர்களுக்கு இருக்கிற ஒரே அடையாளம் “இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்கள்” என்பதுதான்.

நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்று சேர்ந்து குழுக்களாக பல முனைகளினூடாக அரசியல் தஞ்சம் கோரியிருக்கிற நிகழ்வு சொல்கிற மிகப் பெரிய உண்மை இது.

ஏனெனில் இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற அடிப்படையிலேயே படுகொலை நிகழ்த்தப்பட்டது. அந்தப் பேருண்மையைத்தான் அன்று கனடாவில் தரையிறங்கிய 490 தமிழர்களும் இன்று இந்தோனேசிய கடற்பரப்பில் மிதக்கும் தமிழர்களும் உலகத்திற்கு உரத்து அறிவிக்கிறார்கள் என்றுதான் நாம் பொருள் கொள்ள வேண்டும்.

போரில் குருரமாகத் தோற்கடிக்கப்பட்டவர்களாக – தமது அடையாள நிலத்தை இழந்தவர்களாக – வாழ்வதற்கான நிலமற்றவர்களாக அவர்களது இருப்பு மாறியிருப்பதை அவர்களது “கூட்டு அரசியல் தஞ்சம்” அறிவிக்கிறது.

ஒரு இனம் அரச உரிமையை வைத்து இறையாண்மை என்ற பெயரில் பிறிதொரு தேசிய இனத்தின் மீது நடத்திய அழித்தொழிப்பு இது. அங்கு நடந்தது உண்மையில் உயிர்களின் பலி அல்ல. தமிழ் என்ற பண்பாட்டு நிலம் பறிக்கப்பட்டது.

இனம் மொழி நிலம் பண்பாடு என்ற அடையாளங்கள் அழிக்கப்பட்ட ஒரு குழுமம் தனது வேர்களைத் தேடி அல்லது தனது வேர்களைத் தக்கவைப்பதற்காக அந்த அழிநிலத்திலிருந்து தப்பிய ஒரு பயணம்தான் மேற்படி நிகழ்வுகளிலுள்ள முக்கிய கூறு.

அத்தோடு ஈழம் என்ற தேசம் குறித்த தாயகம் தேசியம் சுயநிர்ணயம் என்ற அரசியல் தத்துவார்த்த பொருண்மைகளை உலகிற்கு ஓங்கி அறிவிக்கிற ஒரு அரசியற் செயற்பாடாகவும் இது இருக்கிறது.

இதை தெளிவாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமிழர் தரப்பு விளக்க வேண்டும்.

போர் முடிவடைந்து விட்டது. இனி அகதிகளை ஏற்கத் தேவையில்லை என்று சிறீலங்காவிலிருந்து மட்டுமல்ல மேற்கிலும் சில கருத்துக்கள் உலாவருகின்றன..

எமது ஆய்வில் இது குறித்து தெளிவாக வரையறுத்திருக்கிறோம். முன்னையதை கழித்துவிட்டாலும் 2009 ம் ஆண்டு குறிப்பான மே மாதம் இறுதிவரையான முதல் ஐந்து மாதங்களில் ஏறத்தாழ 80000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளர்கள் என்று அனைத்துலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொல்லப்பட்டவர்கள் அனைவரும் இனம் மொழி பண்பாடு என்பவற்றால் ஒரே அடையாளத்தை உடையவர்கள் என்பது இங்கு குறிப்பான கவனத்திற்குரியது.

அவர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள்? இதற்கான விடையில்தான் இந்த கூட்டு அரசியல் தஞ்சத்தின் அடிப்படை மட்டுமல்ல அவர்கள் சார்ந்துள்ள இனத்தின் அடையாளமும் அவலமும் புதைந்திருக்கிறது.

தாயகம் தேசியம் சுயநிர்ணயம் என்ற அரசியல் தத்துவார்த்த பிரச்சினைக்கும் அப்பால் இனம் மொழி நிலம் பண்பாடு என்ற உள்ளார்ந்த அடிப்டையில் தமது சொந்த நிலத்தில் சுதந்திரமாக வாழ முற்பட்ட – எத்தனித்த ஒரு குழுமத்தின் பிரச்சினையாகவே சிறீலங்காவின் இன முரண்பாட்டை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அல்லது அதன் ஆரம்ப புரிதல் அப்படித்தான் இருக்க வேண்டும். முள்ளிவாய்க்கால் படுகொலைகளை கவனமாக எதிர் கொள்ளும் ஒருவர் இதை சுலபமாக இனங்கண்டு கொள்ள முடியும்.

சிறீலங்காவில் தமிழர்கள் என்ற அடையாளத்தின் அடிப்டையில் இப்போது தாயகம் தேசியம் சுயநிர்ணயம் என்ற அரசியல் தத்துவார்த்த சொல்லாடல்கள் மட்டுமல்ல இனம் மொழி நிலம் பண்பாடு என்ற அடிப்படையே கேள்விக்குள்ளாக்கப்பட்டுவிட்டது.

இந்த அடிப்படையில் இனம் மொழி நிலம் பண்பாடு என்ற அடிப்படையில் அழித்தொழிப்பு நடைபெற்ற மண்ணில் அந்த அடையாளங்களுடன் எப்படி தொடர்ந்து வாழ முடியும்?

அந்த அழித்தொழிப்பின் இலக்குகளாக – நேரடி சாட்சிகளாக எத்தகைய மனநிலையில் அங்கு தங்கியிருக்க முடியும்?

இத்தகைய அழித்தொழிப்பு இனி அங்கு நடைபெறாது என்பதற்கு யார் உத்தரவாதம்? அழித்தொழிப்பின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட்டார்களா? குறைந்தது எச்சரிக்கையாவது செய்யப்பட்டார்களா?

பொது மன்னிப்பு என்று அறிவிக்கப்பட்டு சரணடயக்கூறிய அரசு இதுவரை அனைத்து போராளிகளையும் விடுதலை செய்ததா?

அவ்வளவு ஏன் புலிகளின் பணயக் கைதிகள் என்று விளிக்கபட்ட மக்கள் யாருடைய பணயக்கைதிகளாக முட்கம்பி வேலிக்குள் இப்போது கிடக்கிறார்கள்?

இப்படி எண்ணற்ற கேள்விகளுக்கு சிறீலங்கா என்ற தேசத்தை இறையாண்மையுள்ள ஒரு தேசமாக அங்கீகரித்து அதன் போருக்கு துணை நின்ற கேடு கெட்ட உலகம் பதில் சொல்ல வெண்டும்.

அதன் பிற்பாடே குழுக்களாக தேசம் தேசமாக எம்மவர் தஞ்சம் கோருவது பற்றிய சலிப்பை கொட்ட வேண்டும்.

போர்க்குற்றம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை ஒரு குழுவை நியமித்திருக்கிறது.

குறைந்தபட்ச அடிப்படையில் அந்த விசாரணையின் முடிவு வெளிவராமல் எந்த அடிப்படையில் அகதிகளை திருப்பி அனுப்ப முடியும். இது அடிப்படையில் ஐநாவின் விதிகளுக்கு முரணானது.

நாம் மீண்டும் வீதியில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த அகதிகளின் பிரச்சினையை மையப் பிரச்சினையாக்கி நாம் போராட்டத்தை தீவிரப்படுத்துவதனூடாக எமது விடுதலைப் போராட்டத்தை வேறு ஒரு தளத்தை நோக்கி நகர்த்த முடியும்.

“இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்கள்” என்ற சொல்லாடலுடன் “கூட்டு அரசியல் தஞ்சம்” என்ற கருத்துருவாக்கத்தை மையப்படுத்துவதனூடாக தாயகத்தில் எமது இருப்பு தொடர்பான காத்திரமான சில செய்திகளை உலகுக்கு சொல்ல முடியும்.

இது நூற்றுக்கணக்கானவர்களுக்கான அரசியல் தஞ்சப் பிரச்சினை அல்ல. எமது அடையாளம் தொடர்பான பிரச்சினை. நாம் இனச்சுத்திகரிப்புக்குள்ளாகியிருக்கிறோம் என்பதை கவனப்படுத்துவதுடன் மௌனமாக உள்ள உலகத்தின் மனச்சாட்சிகளை உலுக்கும் நடவடிக்கை இது. எமது போராட்டத்தின் அடுத்த வடிவமும் இதுதான்.

( இந்த கட்டுரை மே 18 இற்கு பின்பு நாம் ஏற்கனவே முன்வைத்த ஈழத்தமிழர்களின் அடையாளம் மற்றும் அராசியல் இருப்பான “கூட்டு அரசியல் தஞ்சம்” மற்றும் “இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்கள்” என்ற எமது ஆய்வை மையப்படுத்தி எழுதப்பட்டது)

-http://www.tamilwin.com

TAGS: