இறுதிப்போரில் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டமை உறுதியாகியுள்ளது! தெ காடியன்

pic01இலங்கையின் இறுதிப்போரில் ஒரு இலட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், இலங்கை இராணுவம் போரில் தடை செய்யப்பட்ட கொத்துக்குண்டுகளை (க்ளெஸ்டர்) பயன்படுத்தியுள்ளமை உறுதியாகியுள்ளதாக தெ காடியன் செய்தி வெளியிட்டுள்ளது.

தெ காடியன் செய்தித்தாள் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது

இதற்கு ஆதாரங்களாக வன்னியில் இருந்து மீட்கப்பட்ட கொத்துக்குண்டுகளின் பாகங்கள் புகைப்படங்களாக காட்டப்பட்டுள்ளன.

குறித்த பிரதேசத்தில் இருந்து ஆர்பிகே 500 ஏ கியு-2.5RD என்ற கொத்துக்குண்டுகளே முல்லைத்தீவு சாலைப் பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது இலங்கை இராணுவத்துக்கு எதிரான வலுவான சாட்சியங்களாக அமைந்துள்ளன

கண்ணிவெடியகற்றும் பணியாளர்களால் இந்த குண்டுகள், இறுதிப்போரின்போது அரசாங்கம் அறிவித்திருந்த தாக்குதல் அற்ற வலய பகுதியில் இருந்தே மீட்கப்பட்டுள்ளன.

இந்த தாக்குதலற்ற வலயத்தில் சுமார் 3 லட்சம் பொதுமக்கள் வரை அடைக்கலம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைதவிர வெடிக்காத நிலையில் இருந்த ஏ கியு-2.5RD கொத்துக்குண்டு ஒன்று சுண்டிக்குளம் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இறுதிப்போரின் போது தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதி பாதுகாப்பு அமைச்சராக இருந்தார் என்பதும் தற்போதைய அமைச்சர் சரத் பொன்சேகாவே அப்போது இராணுவ தளபதியாக இருந்தார் என்பதையும் காடியன் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை இந்த கொத்துக்குண்டுகள் மீட்ப்புச் செய்தியை ஹலோ ட்ரஸ்ட் கண்ணிவெடியகற்றும் நிறுவனத்தின் முன்னாள் பணியாளர் ஒருவரே காடியனுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் இவ்வாறான கொத்துக்குண்டுகளின் 42 பாகங்கள், ஆனையிறவு, பச்சிலைப்பள்ளி போன்ற இடங்களிலும் 2012ம் ஆண்டு காலப்பகுதியில் மீட்கப்பட்டதாக ஹலோ ட்ரஸ்ட்டின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த வகையான குண்டுகள் ஏற்கனவே ஜோர்ஜியா, சிரியா போன்ற நாடுகளில் பயன்படுத்தப்பட்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமது குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் கருத்தை பெறமுடியவில்லை என்று காடியன் குறிப்பிட்டுள்ளது.

எனினும் தற்போது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாடு நடைபெற்று வரும் சூழ்நிலையில், இந்த தகவல்கள் இலங்கை அரசாங்கத்துக்கு மேலும் நெருக்கடியை தோற்றுவிக்கும் என்றும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: