கிழக்கில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நஷ்டஈடு வழங்கிய விடுதலைப்புலிகள்!

slmcமுன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் போன்றவர்களே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிக்குள் குழப்பத்தை மூட்டிவிட்டனர் என அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் யூ.எல்.எம் முபீன் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்து அசையாச் சொத்துக்களை இழந்த ஏறாவூர் பொதுமக்களுடனான சந்திப்பு இன்று ஏறாவூர் மக்காமடி பெண்கள் உயர்தரப் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அங்கு உரையாற்றிய அவர் இந்த கருத்தினை வெளியிட்டார்.

வடக்கிலிருந்து கிழக்கைப் பிரித்த இனவாதியான அதாவுல்லாஹ்வே அந்தக் காலத்தில் புலிகளுடனான பேச்சுவார்த்தைகள், வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் இடம்பெற்றபோது அந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் காங்கிரஸ் பங்குபற்றக் கூடாது என்று கூறி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிக்குள் பிளவுகளை ஏற்படுத்தினார்.

ஆனாலும், கட்சிக்குள் இருந்த இனவாதத்துக்கு எதிரான அதிகபட்ச ஆதரவு என்ற மனோநிலை அதாவுல்லாஹ்வின் இனவாதக் கருத்துக்களுக்குச் செவிசாய்க்கவில்லை.

கிழக்கு மாகாணத்திலே முஸ்லிம்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் சம்பந்தமாக பிராந்திய மட்டத்திலே உள்ள புலித் தலைமைகளோடு பேசித் தீர்க்க வேண்டும் என்று பிரபாகரன் தலைமையில் அப்போது முடிவெடுக்கப்பட்டது.

எனவே, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை புலிகளுக்கு எடுத்துக் கூறும் ஒழுங்குகளுக்கு நான்தான் தலைமை தாங்கினேன்.

அப்போது புலிகளால் கையகப்படுத்தப்பட்ட ஏறாவூர் விவசாயிகளின் நெற்செய்கைக் காணிகளுக்குரிய நஷ்டஈட்டை புலிகளிடமிருந்தே இலட்சக்கணக்கில் பெற்றுக் கொடுத்ததை பெருமையோடு இவ்விடத்தில் சொல்ல வேண்டும்.

இதை நான் ஏன் இங்கு குறிப்பிடுகின்றேன் என்றால், புலிகள் இயக்கம்தான் வழமையாக தனிநபர்கள், வர்த்தகர்கள். பொதுமக்கள் என இன்னும் எத்தனையோ வழிகளில் கப்பமும் வரியும் அறவிட்டு வந்த காலத்தில் நாங்கள் ஆயுத பலத்தோடு இருந்த புலிகளோடு எங்களது உரிமைக்காக அஹிம்சை வழியில் போராடி அவர்களிடமிருந்தே நஷ்டஈட்டைப் பெற்று, புலிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுத்தோம். இது ஒரு சாதனை.

சமகாலத்தில் தமிழ் பேசும் சமூகங்களின் குரலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐயா அவர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீமும் இருக்கிறார்கள். இரு தலைவர்களும் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக ஓயாது குரல் கொடுத்து வருகின்றனர்.

யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது சீர்குலைக்கப்பட்ட இன ஐக்கியம் மீண்டும் துளிர்விடும், யுத்தம் ஓயும் சமாதானம் நிலவும் என்று யாரும் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை.

ஆனால், தமிழ் முஸ்லிம் சமூகத் தலைவர்களின் தூரநோக்கான சிந்தனைகளாலும் தியாகத்தாலும் மீண்டும் இன ஐக்கியம் துளிர்விட ஆரம்பித்துள்ளது.

இந்தத் துளிரை கருகிப்போக விடக் கூடாது. தமிழ் முஸ்லிம் ஐக்கியம் எனும் விருட்சத்தை நீரூற்றி வளர்த்தால் சமாதானம் எனும் சிகரத்தை எட்டிப் பிடித்து நிம்மதியாக வாழலாம். அதற்கு நாம் அனைவரும் இனவாதத்தைத் தோற்கடிக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: