இயக்கத்தில் இருக்கும்போதே தமிழினிக்கு புற்றுநோய் என்பது பொய் ! தாயாரின் உருக்கமான நேர்காணல்

tamilini 8dddதமிழினிக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருக்கும்போது புற்றுநோய் என சிலர் சொல்வது உண்மைக்குப்புறம்பானது என தமிழியின் தாயார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது,

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருக்கும் போது எனது மகள் தமிழினிக்கு புற்றுநோய் இருந்ததாக முன்னாள் போராளி ஒருவர் வவுனியாவில் நடைபெற்ற நல்லிணக்கப் போறி முறைக்கான சாட்சியம் அளிக்கும் நிகழ்வில் சாட்சியம் அளித்ததனை காணொளிகள் மூலமாகப் பார்த்தேன்.

அத்துடன் வடக்குமாகாண சபை அமைச்சர் ஒருவர் கூறியதனையும் தொலைக்காட்சி வாயிலாகவும் பார்வையிட்டேன். எனினும் எனது மகளிற்கு புற்றுநோய் இருக்கவில்லை என நான் கூறுகின்றேன.

என்னுடைய மகளுக்கு புற்று நோய் இருந்ததாக அவர்கள் கூறுவார்களாயின் அதனை அவர்களால் நிரூபிக்க முடியுமா?

எனது மகளுக்கு புற்றுநோய் இருந்த விடையம் அவர்களுக்கு தெரியும் என்றால் ஏன் அதனை எனக்கு முதலே கூறவில்லை என்ற பல கேள்விகளைத் தொடுத்திருந்தார்.

இந்நிலையில் உங்கள் மகள் தமிழினிக்கு விச ஊசி ஏற்றப்பட்டுத்தான் இறந்தாரா எனக் கேட்டபோது,

எனது மகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டுத் தான் இறந்தாரா அல்லது யுத்தத்தின் பின்னர் புற்றுநோய் வந்துதான் இறந்தாரா என நான் வாதிட வரவில்லை. ஆனால் எனது மகள் தமிழினிக்கு விடுதலைப்புலிகள் அமைப்பில் இருக்கும் காலத்தில் புற்றுநோய் இருந்தது என்பதனை ஏற்றுக்கொள்ள என்னால் மட்டுமல்ல யாராலும் முடியாது.

ஏன்னெனில் தமிழினிக்கு விடுதலைப்புலிகள் காலத்தில் புற்றுநோய் இருந்தது என்ற கருத்தைப் பார்த்தால் 2006 ம் ஆண்டிற்கு முற்பகுதியில் இறந்திருக்க வேண்டும். அவர் இறந்தது 2015ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் பூரண சிகிச்சை உரிய முறையில் பெற்றால் மாத்திரமே அக்கொடிய நோயிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.

சில வேளைகளில் அதுவும் பயனளிப்பதில்லை. சிகிச்சை எதனையும் பெற்றுக் கொள்ளாத தமிழினி ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் எவ்வாறு இவ்வளவு வருடக்கணக்கில் உயிருடன் இருந்தார்?

அரசியல் இலாபங்களுக்காக எங்களைப் பாவிக்காதீர்கள். எனது மகள் இறந்து விட்டாள். அதனை அப்படியே விட்டுவிடுங்கள். உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடாதீர்கள்.

எனது மகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவேளை வைத்தியசாலை சென்று பார்வையிட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடம் உதவி கேட்டிருந்தேன். எங்களுக்கு அவர் உதவ வேண்டும் என்ற உரிமையுடன் கேட்டிருந்தேன்.

அவர் இரண்டு மூன்று தரம் மகளைப் பார்வையிடச் செல்ல சிறியளவு பண உதவியினைச் செய்தார். அது அவ்வேளைகளில் பெரிய உதவியாக இருந்தது.

அத்துடன் வைத்தியசாலையிலும் சென்று பார்வையிட்டிருந்தார். இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் சில சிறிய உதவிகளைச் செய்திருந்தார். நான் எதனையும் மறக்கவில்லை. இப்பொழுது நான் எங்கும் செல்வதில்லை. செல்ல வேண்டிய தேவையும் இல்லை.

ஏன் எனில் நான் ஒரு சிறிய கடை ஒன்றினை அமைத்து அதில் வரும் வருமானத்தில் நானும் எனது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் சாப்பிட்டு எமது வாழ்க்கை என வாழ்ந்து வருகின்றோம்.

பொய்யான தகவல்களை வெளியிட்டு எங்கள் உடைந்து போயுள்ள மனங்களை மீண்டும் மீண்டும் உடைக்காதீர்கள் என்றார்.

-tamilwin.com

TAGS: