இராணுவ வீரர்களே வன்முறைக்கு அடிப்படை – லண்டனில் ஒலித்தது முதலமைச்சர் குரல்

vikneshwaran_002வடக்கில் இடம் பெறும் வன்முறைகளை ஒழிக்க வேண்டும், வடக்கில் இராணுவ வீரர்கள் இருப்பது வன்முறைக்கு ஓர் அடிப்படையாக அமைகின்றது என வட மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.

பிரித்தானியாவின் கிங்ஸ்டன் அப்பொன் தேம்ஸ் (Kingston upon Thames) மாநகரம் யாழ்ப்பாணத்துடன் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு இரட்டை உடன்படிக்கையில் நேற்று கைச்சாத்திட்டுள்ளது.

குறித்த அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் அங்கு உரை நிகழ்த்துகையில்,

கடந்த காலங்களில் அமைச்சுக்களின் பாதைகளில் ஏற்பட்டுள்ள தடைகளை நீக்கி புதிய பாதையை அமைத்துக் கொடுத்து வழிவகுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும், பொருளாதாரம், மருத்துவம், கல்வி, விளையாட்டு ஆகிய துறைகளில் அபிவிருத்தி தொடர்பில் முதலீடுகள் கிடைக்கப் பெறுவதனால் அபிவிருத்தி திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாக உள்ளது.

தற்போது மூன்று முதலீட்டு முறைகளை அடிப்படையாக கொண்டு அபிவிருத்தி நடவடிக்கைகளில் வட மாகாண சபை ஈடுபட்டு வருகின்றது.

தனியார் மற்றும் பொது மக்கள் பங்களிப்பு முதலீடு புலம்பெயர் முதலீடு என பலவகைகளில் முதலீட்டு முறைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மாபெரும் புதிய திட்டம் ஒன்று மத்தியக் கிழக்கு நாடுகள் போன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக வன்னி பகுதியில் உணவு மற்றும் பழங்கள், மரக்கறி போன்ற உற்பத்திகளை மேற்கொண்டு அவற்றை சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட தொழிநுட்பக் கற்கை நெறிகள், நிறுவனங்கள் அமைப்பது மற்றும் இளைஞர் யுவதிகளின் கல்வி நடவடிக்கைகளை முன்னேற்றப்பட வேண்டும்.

அத்தோடு சமுதாயத்தை அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்வதோடு சமாதானம் நீதி என்பன நிலைநாட்டப்பட வேண்டும்.

வட மாகாணத்தில் 150,000 வரையிலான இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளமை வன்முறைக்கான அடித்தளத்தை விடுகின்றது. முதலில் வடக்கில் இடம் பெறும் வன்முறைகளை ஒழிக்க வேண்டும்.

அதற்கு வடக்கில் இருக்கின்ற இராணுவ வீரர்களை அகற்ற வேண்டும், அத்துடன் வடக்கில் இருக்கும் இராணுவ வீரர்களினால் மக்களின் நிலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மக்களின் வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் நீதிக் கொள்கைகளை உருவாக்கவேண்டும். பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக ஒழிக்க வேண்டும்.

மேலும் காணாமல் போனவர்கள் அலுவலகம் அமைத்தது நாட்டிற்கு நன்மையை தருகின்றது என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.

இதேவேளை சர்வதேச சமூகம் உதவி அளிக்கின்றது என்றால் அதற்கான காரணம் நாட்டின் கொள்கைகள் அடிப்படையிலேயே. அதனால் நீதியுடன் செயற்படுவது சிறந்த ஒன்றாக கருதப்படுகின்றது.

மேலும் 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதியில் இருந்து வட மாகாணத்தில் பல மாற்றங்கள் இடம் பெற்று வருகின்றது. வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் வேலையில்லாத இளைஞர் யுவதிகளுக்கான தொழில்வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளன.

காரைநகர், குருநகர், மன்னார், முல்லைத் தீவு ஆகிய பகுதிகளில் முதலீட்டு உதவிகள் மூலம் புதிய தொழில்நுட்ப அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பிரித்தானியாவின் தமிழ் அமைப்புக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் விளையாட்டு மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

மேலும் இந்த பயிற்சிப் பட்டறையில் வடமாகாணத்தின் பல்வேறு தேவைகள் மற்றும் வாய்ப்புக்கள் பற்றியும் முதலமைச்சர் தெரிவித்திருந்ததை தொடர்ந்து, இந்த நோக்கங்களிற்கான முதலீடுகள் விரைவில் கிடைக்கப்பெறும் எனவும் நான் எதிர்ப்பார்க்கின்றேன் எனவும் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: