இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான கொள்கை : தமிழக முதல்வருக்கு வலியுறுத்தல்

sivajilingamமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா விட்டு சென்று இடத்தில் இருந்து தமிழகத்தின் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் இலங்கைக்கு தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் நேற்று யாழ்ப்பாணத்தில் வைத்து இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

ஜெயலலிதாவை பொறுத்தவரை, இலங்கை தமிழர் விடயத்தில் புதுடில்லிக்கு அவர் அழுத்தங்களை கொடுத்து வந்தார்.

அத்துடன் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் சந்திக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அவர் தொடர்ந்தும் நடவடிக்கைகளை எடுத்து வந்தார் என்றும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியதாவது:

எந்தச் சூழ்நிலையிலும், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தவர் ஜெயலலிதா.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுத்த போதெல்லாம், அதற்கு எதிராக குரல் கொடுக்கவும் அவர் என்றும் தயங்கியதில்லை.

மேலும், தமிழ் மக்களின் நலனுக்காக, இந்திய அரசு மூலம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் ஜெயலலிதா தவறியதில்லை.

அதேபோல், பாக் ஜலசந்தியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமையை மீட்டதிலும் அவருக்குப் பெரும் பங்கு உண்டு.

இந்நிலையில், ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வமும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

மேலும், இலங்கைத் தமிழர்களின் நலன்களைக் காக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் கொள்கையையும் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றார் சிவாஜிலிங்கம்.

-http://www.tamilwin.com

TAGS: