யார் கொலையாளி? மகிந்தவா, மோடியா : நாமல் எம்.பி கேள்வி

namal_kolnnaava_00முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொலையாளி என கூறியவர்களே இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க தயாராகிகொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் தீவிரவாதத்தை ஒழித்து, நிரந்தர சமாதானத்தை கொண்டுவந்த மகிந்த ராஜபக்‌ச தமிழ் அப்பாவி மக்களை கொன்றதாக சர்வதேசம் சென்று சிலர் முறையிட்டனர்.

எனினும், அவர்களே இன்று மோடியை இரு கரம் கூப்பி வரவேற்க தயாராகியுள்ளமைக்கு அவர்கள் வெட்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து உரையாற்றி போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களை கொன்று குவித்ததாக சர்வதேசம் வரை சென்ற தமிழரசு கட்சி அரசியல் வாதிகளும், மனோகணேசன் போன்றவர்களும் இரத்தக்கரை படிந்த மோடியுடன் கை குலுக்க இன்று தயாராகிவிட்டார்கள்.

நாம் ஒரு அரசாங்கமாக இருந்து தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டோம். ஆனால் மோடி ஒரு இனத்தின் மீது நேரடியாக போர் தொடுத்தவர். இப்போதும் தொடுத்துக்கொண்டிருப்பவர்.

2002ம் ஆண்டு இந்தியாவின் குஜராத்தில் உலக வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய கலவரத்தில் அப்பாவி முஸ்லிம் மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர்.

முஸ்லிம்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் சூரையாடப்பட்டன. இதன் பின்னணியில் மோடி இருந்ததாக நேரடியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கபட்டதுடன், அவருக்கு எதிராக பல வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

அப்படியான ஒருவர் இன்று சர்வதேச வெசாக் தினத்துக்காக இலங்கை வருகிறார். ஒரு ஆண்மீக நிகழ்வுக்கு இப்படியான ஒருவரை அழைத்து வருவது வேடிக்கையான விடயமாகும்.

நாம் வெள்ளை வான்களில் ஆள் கடத்தியதாக கூறி அரசியல் இலாபம் தேடிய மனோகணேசன் போனறவர்கள் எந்த முகத்தை வைத்துக்கொண்டு மோடியை வரவேற்க செல்கிறார்கள் என்பது எமக்கு தெரியவில்லை.

இன்று கஷ்மீரில் தினம் தினம் அப்பாவி பொது மக்கள் கொல்லப்படுகிறார்கள். ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளன. பல அப்பாவி பெண்களின் கற்பை இந்திய இராணுவம் சூரையாடியுள்ளது.

பலரின் கண்கள் பறிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு பின்னால் மோடி அரசும், அவரின் இரானுவமும் உள்ளது. எமக்கு எதிராக போர் கொடி தூக்கியவர் இதற்கு எவ்வாறு நியாயம் கற்பிக்க போகிறார்கள்.

மோடியின் வருகையால் இலங்கைக்கு ஒன்றும் கிடைக்கப்போவதில்லை. மாறாக எமது நாட்டு சொத்துக்கள் இந்தியாவுக்கு தாரை வார்க்கபடுவதை தவிர வேறு ஒன்றும் நடக்காது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-tamilwin.com

TAGS: