துணிச்சலான நீதித்துறை: நீதிபதி இளஞ்செழியன் இலக்கு வைக்கப்பட்டமைக்கான காரணம்

ezhanகடந்த காலங்களில் சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் துணிச்சலாக நீதித்துறை சார்ந்த நடவடிக்கைகள் காரணமாக அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்ததாக பிரதி அமைச்சர் ஹரீஸ் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விடுத்துள்ள கண்டண அறிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரதி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பல்கலைக்கழகத்தில் எனது மதிப்புக்குரிய ஆசானாக திகழ்ந்த யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தை சட்டத்தரணி என்ற வகையில் வன்மையாக கண்டிக்கிறேன்.

இன, மத வேறுபாடின்றி நீதியாக செயற்படுகின்ற யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இச்சம்பவத்தில் தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.

அவர் கடந்த காலங்களில் சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் துணிச்சலாக நீதித்துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன் காரணமாக அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்ததை அனைவரும் அறிவர்.

அவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் நீதித்துறைக்கு எதிரான துப்பாக்கி பிரயோகமாகவே பார்க்கப்படுகிறது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இத்தாக்குதல் நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் அல்ல என்று கூறிய விடயத்தை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

பொலிஸார் குறித்த நிகழ்வை திசை திருப்புவதற்கு முயற்சிக்காது இத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை விரைவில் கைது செய்யும் வகையில் தீவிரமாக செயற்பட்டு குற்றவாளி சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

அதேவேளை நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேமச்சந்திரவுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிபதியை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு? சந்தேகத்தை ஏற்படுத்தும் பொலிஸாரின் அவசர தகவல்

யாழில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் நீதிபதி இளஞ்செழியன் மீது வைக்கப்படதல்ல என பொலிஸார் அவசர அவசரமாக தெரிவிப்பது பலத்த சந்தேகத்தை எற்படுத்தியுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லூரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை தொடர்ந்து, நீதிபதியின் பாதுகாவலருடைய துப்பாக்கியை பறித்து துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக பொலிஸார் அவசர அவசரமாக கூறினார்கள்.

பொலிஸார் எதற்காக இவ்வளவு அவசரத்தை காட்டுகின்றார்கள் என்பது எமக்கே தெரியவில்லை என்பதுடன், இந்த செயற்பாடு பலத்த சந்தேகத்தை உருவாக்கியிருக்கின்றது.

இது போன்றே 2004ம் ஆண்டு நீதிபதி அம்பேத்பிட்டிய விடுதலைப் புலிகளாலேயே கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட போதும், பாதாள உலக குழுக்களே அதனை செய்திருந்தமை வெளிச்சத்திற்கு வந்தது.

எனவே எதனையும், ஆராய்ந்து தீர்க்கமான முடிவிற்கு வந்த பின்னதாகவே கூற வேண்டும். நீதிபதி இளஞ்செழியனின் செயற்பாடுகளை மழுங்கடிப்பதற்கு அல்லது அவரை இல்லாமல் செய்வதற்கு இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டிருக்கலாம்.

எனவே முழுமையான விசாரணைகளை நடத்தாமல் பொலிஸார் அவசரப்படுவது எதற்காக? ஒட்டு மொத்தத்தில் இலங்கையில் நீதித்துறையின் சுதந்திரத்தை இந்த சம்பவம் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது என சுட்டிக்காட்டினார்.

யாழ். நல்லூர் பகுதியில் வைத்து, நேற்று முன் தினம் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர்கள் இருவர் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகியிருந்ததுடன், ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-tamilwin.com

TAGS: