எமது மாகாணத்தில் முடிவெடுக்கும் உரிமை, எமக்கே உண்டு: சி.வி.விக்னேஸ்வரன்

“எமது மாகாணத்தின் விடயங்கள் தொடர்பில் முடிவெடுக்க வேண்டிய உரிமை எமக்கே உண்டு. அவற்றைத் தடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளன்று, வடக்கு மாகாண சபையின் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டமை தொடர்பாக, தென்னிலங்கை அரசியல்வாதிகள் முதலமைச்சர் மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தொடர்பாக பல சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகின்றார்கள். அந்த விடயம் தொடர்பாக கேள்வியெழுப்பிய போதே, முதலமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளதாவது, “வடக்கு மாகாணத்தில் நடப்பவற்றுக்கு நாமே பொறுப்பானவர்கள். எமக்கு மற்றவர்கள் கூற வேண்டிய அவசியமில்லை. எமக்கு இருக்கும் அதிகாரங்களை குறைத்து விட்டு மேலும் அந்த அதிகாரங்களைத் தாங்கள் எடுக்க நினைக்கின்றார்களோ தெரியவில்லை. அவர்களின் கருத்துகளுக்கு எமக்கு எந்தவித பிரச்சினைகளும் இல்லை. எமது மாகாணத்தில் நடக்கும் சம்பவங்கள் தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் உரிமை எமக்கே உண்டு. அவற்றைத் தடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை.” என்றுள்ளார்.

அத்துடன், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அன்று பல சர்ச்சையான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. வடக்கு மாகாண சபை ஒழுங்கமைப்பில் நடைபெற்றதா? அல்லது பல்கலைக்கழக மாணவர்கள் தலைமையில் நடைபெற்றதா? என மீண்டும் கேள்வி எழுப்பியபோது, பதிலளித்த முதலமைச்சர்,  “நினைவேந்தலில் பல சர்ச்சையான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், எதிர்வரும் வருடம் 10வது வருடம் என்றபடியால், மக்கள் அனைவரும் இணைந்து செய்யக்கூடிய வகையில் தற்போதிலிருந்தே, அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கின்றோம்.கடந்த நினைவஞ்சலியின் போது பல குறைபாடுகள் இருந்தாக சுட்டிக்காட்டியுள்ளார்கள். எதிர்வரும் வருடம் நடைபெறவுள்ள அஞ்சலி நிகழ்வில் அந்த குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும்.

கிளிநொச்சி ஹற்றன் நஷனல் வங்கி ஊழியர்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. வங்கிகளுக்கு ஒரு விதிமுறைகள் உள்ளது. அந்த விதிமுறைகளுக்கு அமைவாக அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. வடக்கு மாகாண சபை மற்றும் அதன் மக்கள் தமது மனோநிலைகளை வெளிப்படுத்தும் வகையில் சில நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பதன் அடிப்படையில் அந்த நினைவஞ்சலி நிகழ்வில் ஏற்பட்ட சில குறைபாடுகள் தொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம். அதனடிப்படையில் சில முடிவுகளை முன்னெடுக்கப்படும்.” என்றுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: