முல்லைத்தீவில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள்; தடுக்கும் வழிமுறைகள் பற்றி ஆராய வடக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு!

முல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்களை தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாக ஆராய்வதற்காக வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும், பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

வடக்கு மாகாணசபை பேரவை செயலக மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 04ஆம் திகதி மாலை 04.00 மணிக்கு குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவதற்கான வழிவகைகளை ஆராய்வதற்காக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கடந்த ஏப்ரல் மாதம் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களுக்கு சென்று நிலைமைகளை நேரில் பார்வையிட்டிருந்தனர்.

இதனடிப்படையில் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்துவதற்கான அழுத்தத்தை மத்திய அரசாங்கத்துக்கு கொடுப்பதற்காக மாகாண சபை உறுப்பினர்களும், வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சந்தித்து கலந்துரையாடுவதென தீர்மானிக்கப்பட்டிருந்தது.எனினும், தவிர்க்க முடியாத காரணத்தால் திட்டமிட்டபடி சந்திப்பு இடம்பெறவில்லை.

அதனடிப்படையில் ஒத்திவைக்கப்பட்ட சந்திப்பு எதிர்வரும் 04ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு வடக்கு மாகாண சபை பேரவை செயலக மண்டபத்தில் நடைபெறும். இந்த சந்திப்பில் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். அதே போல் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர்கள், உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.” என்றுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: