யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நிரந்தர வீடுகளில் குடியமர்த்துவதற்கு அனைத்துத் தரப்புக்களும் ஒத்துழைக்க வேண்டும்

வடக்கு- கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நிரந்தர வீடுகளில் மீள்குடியேற்றுவதற்கு அனைத்துத் தரப்பினதும் ஒத்துழைப்பு அவசியம் என்று மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கடந்த காலங்களில் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டாலும் மேலும் 165,000 வீடுகளுக்கு மேல் வீட்டுத் தேவை இருப்பதனால் சிறந்த தொழில்நுட்பத்துடன் குறைந்த பொருட் செலவில் மிகவிரைவாக வீடுகளை அமைத்து இம்மக்களை குடியேற்ற அமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பதாக அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றும் உள்ளூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றும் இணைந்து முன்வைத்த முன்மொழிவுகளுக்கு அமைய, ஒரு தனி வீட்டின் பெறுமதி 1.28 மில்லியன் ரூபாய் என்ற அடிப்படையில் வீடுகள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசாங்கத்தின் புதிய வேலை வாய்ப்பினை உருவாக்கும் இலக்கினை நோக்காகக் கொண்டு இரண்டு விடயங்களில் இந்த நிறுவனங்களுடன் இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வீட்டிற்கு தேவையான கட்டுமான பொருட்களை உற்பத்தி செய்வதற்கு இரண்டு தொழிற்சாலைகளை வடக்கிலும் கிழக்கிலும் நிறுவுதல், கட்டங்களை அமைப்பதற்கும், வேலை செய்வதற்கும் முற்றுமுழுதாக வடக்கு, கிழக்கு இளைஞர் யுவதிகளையும் நிரந்தர தொழில் உறுதிப்பாட்டுடன் உள்வாங்குவதற்கும் அவர்களுக்கான பயிறிசியினை வேலைக்கு அமர்த்திய பின் தொழில் செய்யும் போது வழங்குவதற்கும் உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் குறைந்தது 5,000 பேரை வீடமைக்கும் பணிக்கு உள்வாங்கவும், மேலதிகமாக குறைந்தது 2,000 பேரை வேலைக்கமர்த்தவும் வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்கு வாய்ப்பாக அமையும். ஒரு இலட்சத்திற்கு மேல் வீட்டுத்தேவை உள்ளமையினால் இந்த மக்களின் வாழ்வு நிலையை உயர்த்தத் தேவையான வீட்டுடன் கூடிய தொழிற் திட்டங்களை முன்வைக்கும் எந்தவொரு வெளிநாட்டு, உள்நாட்டு நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க அமைச்சு தயாராக இருப்பதாக கூறப்படுகின்றது.

-4tamilmedia.com

TAGS: