மைத்திரி தலைமையில் தமிழருக்கெதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள்..

முல்லைத்தீவூ மாவட்டத்தில் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் நடவடிக்கைகள் தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் அமைந்திருப்பதாக வடமாகாணசபையில் இன்று (26.05.2018) கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

வடமாகாண சபையின் 125 ஆவது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம்பெற்றிருந்த நிலையில், சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவின் முழுமையான ஆதரவுடனேயே இந்த நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மத்திய அரசின் கீழ் உள்ள வன வள பாதுகாப்பு திணைக்களம், வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் சிறிலங்கா இராணுவம் உள்ளிட்ட அரச படையினர் தமிழ் மக்களின் நிலங்களை அபகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக விரிவான தரவுகளுடன் மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிரேரணையொன்றை முன்வைத்தார்.

தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டம் முழுமையாக வட மாகாணத்திலிருந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் குற்றம்சாட்டினார்.

சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவின் தலைமையிலேயே வட மாகாணத்தில் மக்களின் காணிகள் பெரும் எடுப்பில் அபகரிக்கப்பட்டு வருவதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் குற்றம்சாட்டினார். இதனால் அவரிடம் நில அபகரிப்பு தொடர்பில் முறையிடுவதில் அர்த்தமில்லை என்றும் அஸ்மின் தெரிவித்தார்.

சிறிலங்கா அரச தலைவர் மீதான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் அயூப் அஸ்மினின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து உரையாற்றிய எதிர்த்தரப்பினரான ஈபி.டி.பி உறுப்பினர் கூட்டமைப்பே ஆதரவு அளித்து தற்போதைய ஜனாதிபதியை ஆட்சிபீடம் ஏற்றியதாக குறிப்பிட்டதுடன், அதனால் அவரது செயற்பாடுகளுக்கு கூட்டமைப்பும் பொறுப்புக்கூற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சயந்தன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த அவையில் கருத்துத் தெரிவித்த சிவாஜிலிங்கம், சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான பாதுகாப்பு அரணாகவே வன இலாக அதிகாரிகள் தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்து வருவதாக குறிப்பிட்டார்.

-athirvu.in

TAGS: