நல்லாட்சி மீது நம்பிக்கையில்லை; பற்றீஸியாவிடம் வலியுறுத்தினார் சம்பந்தன்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பொதுநலவாயச் செயலாளர் நாயகம் பற்றீஸியா ஸ்காட்லாண்டுக்கும் எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள எதிர்க் கட்சித் தலைவரின் அலுவலகத்தில், இன்று (03) கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது, பல்வேறு விடயங்கள் தொடர்பில் செயலாளர் நாயகத்தைத் தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன், ஆயுதப் போராட்டம் முற்றுப் பெற்றிருந்தாலும், முழுமையான அமைதியும் சமாதானமும், மக்களிடையே இல்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.

மேலும், “புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததும், மக்கள் குறிப்பாக, சிறுபான்மை மக்கள் மத்தியில், பாரிய எதிர்பார்ப்புகள் காணப்பட்டன. அரசாங்கம், சர்வதேச மட்டத்திலும் நாட்டு மக்களுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமென அவர்கள் எதிர்பார்த்தார்கள். பிராந்தியங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் வகையில், அரசாங்கக் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு புதிய அரசியல் யாப்பு, உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுதல், நட்டஈடு, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள், படையினர் கைவசமுள்ள பொதுமக்களின் காணி விடுவிப்பு, மிகக் கடுமையான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் விடுதலை போன்றன, அவ்வாறான வாக்குறுதிகளில் சிலவாகும். எனினும் இவை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை” எனவும் வலியுறுத்தினார்.

புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதிலும் இத்தகையான ஒரு பொருத்தனை உள்ளதை வலியுறுத்திய இரா. சம்பந்தன், புதிய அரசியல் யாப்பை உருவாக்கும் பிரேரணையானது, நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், ஒரு சில அரசியல் காரணங்களின் நிமித்தம், இதனை முன்னெடுத்துச் செல்வதில் அரசாங்கத் தரப்பில் தாமதங்கள் காணப்படுகின்றன எனவும் தெரிவித்தார்.

மேலும், இந்த நாடு பாரிய யுத்தம் ஒன்றுக்கு முகம் கொடுத்தமைக்குக் காரணங்கள் உள்ளன என்பதை சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், ஒருவர் உறுதியாக இல்லாதவிடத்து, இப்பிரச்சினையைக் கையாள முடியாது என்றும் கடும் போக்காளர்களின் நடவடிக்கைகளுக்கு அஞ்சி, இவற்றை ஒருவர் கைவிட முடியாது என்றும் கூறிய இரா. சம்பந்தன், அரசாங்கமானது, உறுதியாக நின்று நாட்டைச் சரியான பாதையில் நடத்த வேண்டும் என்பதனையும் வலியுறுத்தினார்.

மேலும் புதிய அரசியல் யாப்பின் உருவாக்கமானது, நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்லும் மிகப் பாரிய ஒரு கருமமாகும் என்பதையும் வலியுறுத்தினார்.

இலங்கையில், ஜனநாயக மேம்பாடு, சட்ட ஒழுங்கு, நல்லாட்சி மற்றும் சூழல் மாசடைதலைத் தவிர்த்தல் உள்ளடங்கலான பல விடயங்களில், பொதுநலவாய செயலகத்தின் பங்களிப்பு தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவரைத் தெளிவுபடுத்திய செயலாளர் நாயகம், புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்துக்கு, தமது பணியகம், தொடர்ச்சியான பங்களிப்பை வழங்குமெனவும் தெரிவித்தார்.

மேலும், மிதமான தமது செயல்களின் மூலம், சமாதானத்துக்கான ஒரு தூதுவராக, இரா. சம்பந்தன் இருப்பதையும், செயலாளர் நாயகம் பாராட்டினார்.

இந்த நாட்டில், நிரந்தரமான அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கு, தனது முழுமையான பங்களிப்பு இருக்கும் என்பதை வலியுறுத்திய இரா. சம்பந்தன், பொதுநலவாயம் உள்ளடங்கலான சர்வதேச சமூகத்துக்கும் இலங்கையில் நிரந்தர சமாதானத்தை நிலைநாட்டுவதில் பங்குண்டு என்பதனையும் வலியுறுத்தினார்.

-tamilmirror.lk

TAGS: