ஆவா உள்ளிட்ட குழுக்களை கட்டுப்படுத்த முக்கிய கலந்துரையாடல்!

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவது தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று(திங்கட்கிழமை) காலை முதல் இந்த முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் யாழ் மாவட்ட செயலாளர், யாழ் மாவட்ட செயலக அதிகாரிகள், யாழ் பொலிஸ் நிலையத்தின் உயர்மட்ட அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் விவாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸாரின் விடுமுறைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய நேற்று(ஞாயிற்றுக்கிழமை) வரை ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் உள்ளிட்ட சுமார் 20 இற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

-eelamnews.co.uk

TAGS: