புலிகளின் ஆயுதங்கள் தற்போது முஸ்லிம் தலைவர்களிடம்! சிங்களவருக்கும் பாதிப்பு?

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரிடம் இருந்த ஆயுதங்கள் தற்பொழுது முஸ்லிம் அரசியல்வாதிகளிடமே இருப்பதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் இன்பராஜா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கும்போது,

2009ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்றனர். அவர்களிடம் இருந்த 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஆயுதங்கள் தற்பொழுது எங்குள்ளது என இன்பராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

இத்தனை ஆயுதங்களும் முஸ்லிம் அரசியல்வாதிகளிடமே உள்ளன. இந்த ஆயுத பலத்தை வைத்துக் கொண்டுதான் ஹிஸ்புல்லா, றிசாட் பதியுதீன் போன்றோர் இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடும் எனக் அச்சுறுத்துகின்றனர்.

அத்துடன், கோவிலை உடைத்து பள்ளிவாசல் கட்டுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இந்த விடயத்தில் ஏன் அரசாங்கம் மௌனம் காக்கின்றது. காத்தான்குடி, கிண்ணியா, மூதூர் பிரதேசங்களிலும் இந்த ஆயுதங்கள் இருப்பதாக தகவல்கள் உள்ளன. இது தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல, சிங்கள மக்களுக்கும் பிரச்சினைக்குரியது.

எந்தவொரு அமைச்சருக்கும் புலிகள் வர வேண்டும் எனக் கூறமுடியும். இருப்பினும், புலிகளின் உறுப்பினர்களாக இருந்த எமக்குத் தான் தெரியும், அவ்வாறு ஒன்று நடைபெறாது என்பது. நாம் விரும்பியோ, விரும்பாமலோ புலிகள் அமைப்பில் இணைந்தோம்.

இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்பாட்டால், நாம் 12 ஆயிரம் பேரும் இந்நாட்டைப் பாதுகாக்க படையில் இணைவோம். எமக்கு வேறு ஒரு நாடு தேவையில்லை. இருப்பினும், தமிழ் அரசியல் தலைவர்கள் இதற்கு உடன்பட மாட்டார்கள் என இன்பராஜா குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அரசியல்வாதிகளுக்கு திரும்பவும் ஓர் ஆயுதக் கலாச்சாரத்தைக் கொண்டுவரவே தேவையாகவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

-http://eelamnews.co.uk

TAGS: