இலங்கையின் இறுதிப் போரில் இராணுவம் கொத்துக்குண்டுகளைப் பயன்படுத்தியதாக சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மின் சூக்கா மீண்டும் தெரிவித்துள்ளார்.
இறுதிப் போர் இடம்பெற்ற பகுதிகளில் கண்ணிவெடிகளைஅகற்றுபவர்கள் கொத்துக்குண்டுகளின் எச்சங்களை கண்டுபிடித்துள்ளமை குறித்து இலங்கை விளக்கமளிக்கவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொத்துக்குண்டுகள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் குறித்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை இலங்கை பொறுப்பேற்றுள்ளதன் (Convention on Cluster Munitions) காரணமாக இலங்கை தனது நாட்டில் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைப்பது குறித்து தெளிவுபடுத்தவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளதாவது, “இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதி தருணத்தில் பொதுமக்களிற்கான பாதுகாப்பு வலயங்கள் என அறிவிக்கப்பட்ட பகுதியில் பெருமளவில் காணப்பட்ட மக்கள் மத்தியில் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டதை அனைத்து ஆதாரங்களும் உறுதி செய்கின்றன.
இலங்கை படையினர் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தினர் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுள்ளன. 2016இல் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரே இதற்கான சுயாதீன சர்வதேச விசாரணையை கோரியிருந்தார். எனினும், அது நடைபெறவில்லை.
தடைசெய்யப்பட்ட ஆயுதத்தினை முற்றாக ஒழிப்பதற்காக குரல்கொடுக்கும் அமைப்பின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டுள்ள இலங்கை அதன் கடந்த காலத்தை மறைக்க முடியாது. ஐக்கிய நாடுகளிற்கும் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் அமைப்புகளிற்கும் பணியாற்றியுள்ள தமிழர்கள் தாங்கள் நேரடியாக கிளஸ்டர் குண்டுகளை பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.”
-4tamilmedia.com

























