தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ!

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ச வாக்குறுதி அளித்துள்ளார்.

தமிழ் வர்த்தக சமூகத்தினரிடமும் சமூக நலப்பணியாளர்களிடமும் அவர் இதனைக் கூறியுள்ளார்.

தமிழ் வர்த்தக சமூகத்தினர், சமூக நலப்பணியாளர்கள், புத்திஜீவிகளுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள பிரதமர் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது நாடு பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்து சென்று கொண்டிருந்ததால் அதிலிருந்து மீட்டெடுப்பதற்காகவே பிரதமர் பதவியைப் பொறுப்பேற்றதாகக் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டு மக்கள் அனைவரும் கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு சகலரும் அந்நியோன்னியத்தையும் சகோதரத்துவத்தையும் வளர்த்து, தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

விசேடமாகத் தமிழ் மக்கள் பொய்ப்பரப்புரைகளை நம்பாமல் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி நாட்டின் தேசிய பொருளாதாரத்தில் பங்கெடுத்துச் சுபீட்சமான சகவாழ்வுக்குத் தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டார்.

சில தனி நபர்களும் ஊடகங்களும் பதவிக்கு வரும் அரசாங்கங்களின் நற்பணிகளையும் விமர்சித்து தங்களின் தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னிலைப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்றும் அதற்குத் துணைபோய் விடாமல், அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்லும் புதிய அரசியல் பயணத்தில் கைகோர்த்துக்கொள்ள வருமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

-athirvu.i

TAGS: