யாழ். பல்கலை மாணவர்கள் கைது; கடுப்பாகி மனோகணேசன் விடுத்துள்ள எச்சரிக்கை!

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளரைக் கைதுசெய்தமை பிழையானது என்று சுட்டிக்காட்டியுள்ளார் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன்.

வடக்கில் அரச நிர்வாக, படைத்தரப்பு, மக்கள் பிரதிநிதிகள் ஒருங்கிணைப்புப் பொறிமுறை அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் தனது ருவிட்டர் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

“பாதுகாப்பு சோதனை எனப் பல்கலைக்கழகத்துக்கு உள்ளே சென்று அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி, இணையத்தில் பகிரங்கமாகப் பகிரப்படும் ஒரு படத்தைக் காரணமாகக் காட்டி, மாணவத் தலைவர்களைக் கைதுசெய்வது அதிக பிரசங்கித்தனம்.

எந்த நாட்டிலும் பல்கலைக்கழகம் ஒரு நாற்று மேடை. இப்போது அமைதியாகக் கிடக்கும் கழகத்தில், வன்முறை என்ற விதையை விதைத்தால், அது அங்கே வன்முறை பயிராகத்தான் முளைக்கும்.

இந்த அரசுக்கு முழுமையான ஆதரவைத் தரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமது ஆதரவுக்கு பிரதியுபகாரமாக வடக்கு மாகாணத்தின் அரச நிர்வாக, படைத்தரப்பு, பொலிஸ் ஆகியவற்றுடன் கூட்டிணைந்த ஒரு பொறிமுறையை இதற்குள் ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

யாழ். கட்டளைத் தளபதி, பிராந்திய பொலிஸ்மா அதிபர், வான்படை, கடற்படை, மாவட்ட அரச அதிபர்கள், ஆளுநர், கூட்டமைப்புத் தலைமை மற்றும் எம்.பிக்கள் மட்டத்தில் இது செயற்பட்டிருக்க வேண்டும்.

இத்தகைய ஒரு பொறிமுறை இருந்திருந்தால், இத்தகைய விடயம் உடனடியாகத் தீர்க்கப்பட்டிருக்கும். கைது, பொலிஸ், நீதிமன்றம், தடுத்து வைப்பு என இழுபட்டிருக்காது.

இராணுவத் தரப்புக் கைதுசெய்ய, பொலிஸ் தரப்பு நீதிமன்றத்தில் கொண்டு நிறுத்த என இது இவ்வளவு தூரம் நிழ்ந்திருக்கக் கூடாது.

பல்கலைக்கழகம்தான் எப்போதும் தீவிரவாதத்துக்கு நாற்றுமேடை. யாழ். பல்கலையில் இப்போது, நானறிய, வன்முறை சிந்தனை கிடையாது. பிரிவினை சிந்தனை கிடையாது. அவை மெல்ல மெல்ல மறைந்து வருகின்றன. மழை விட்டாலும், தூவானம் விடாது போல் ஆங்காங்கே எச்ச சொச்சங்கள் காணப்படத்தான் செய்யும்.

இது இளம் மாணவர் விவகாரம். இவற்றை சாணக்கியமாகத்தான் கையாள வேண்டும். ஆனால், இத்தகைய முன்யோசனையற்ற சம்பவங்கள் துளிர்விடும் ஜனநாயக சிந்தனையைக் கெடுத்து விடுகின்றன.

ஜே.வி.பி. போராளிகள் என்ன, பூக்களை வைத்துக்கொண்டா சண்டை இட்டார்கள்? அவர்கள் என்ன, இந்தியப் படைகளுடனா சண்டை இட்டார்கள்? இன்று, தென்னிலங்கையில் ஜே.வி.பி. தலைவர் விஜேவீரவின் படங்கள் நாடு முழுக்க சுவரொட்டியாகவே ஒட்டப்பட்டுக் கொண்டாடப்படுகின்றன.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் படங்களும் இணையதளத்தில் அபரிதமாக தினசரி பயன்படுத்தப்படுகின்றன. இந்தநிலையில், அறையில் படம் இருந்தது என்று இதை ஒரு பெருங்குற்றமாகக் கருதி கைதுசெய்து, சிறையில் அடைத்து, மாணவர் மத்தியில் சினத்தையும், மக்கள் மத்தியில் வெறுப்பையும் ஏற்படுத்தி இருக்கக் கூடாது.

உண்மையில், அரசை அடுத்து, வடக்கின் பிரதான மக்கள் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நண்பர்களின் குறைபாடாகவே இதை நான் கருதுகிறேன். எனது இந்த ஆரோக்கியமான விமர்சனத்தை கூட்டமைப்புத் தலைமை புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்.

இதை நான் சொல்வதற்குக் காரணம் இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது அரசின் அதிகாரபூர்வமற்ற பங்காளியாகவே இருக்கின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மற்றும் கடந்த ஒக்டோபர் அரசமைப்பு சதி முறியடிப்பு ஆகியவற்றில் பாரிய பங்களிப்பை, கூட்டமைப்பு இந்த அரசுக்கு வழங்கியுள்ளது. அதன்மூலம் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் இழந்தது. இறுதியாக அவசரகால சட்டத்தையும் எதிர்க்காமல் ஏகமனதாக நிறைவேற ஆதரவளித்துள்ளது. இவை அனைத்தும் சரியே.

ஆனால், இவற்றுக்கு பிரதியுபகார விளைவாக வடக்கு மாகாணத்தின் அரச நிர்வாக, இராணுவ, பொலிஸ் ஆகியவற்றுடன் கூட்டமைப்புத் தலைமை மற்றும் எம்.பிக்கள் கூட்டிணைந்த ஒரு பொறிமுறை ஏற்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்.

வடக்கில் அரச நிர்வாக மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்போது அவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்ற நியதி உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

இப்போது போர் முடிந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன. இன்று பழைய யுத்தகால நியதிகள் செல்லாது. புதிய நியதிகள் உருவாக வேண்டும்.

இத்தகைய ஒரு பொறிமுறை இருந்திருந்தால், இத்தகைய விடயம் உடனடியாக தீர்க்கப்பட்டிருக்கும்.

கைதுசெய்யவா, வேண்டாமா என அவ்விடத்திலேயே தொடர்பு கொண்டு பேசி முடிவெடுத்திருக்கலாம். இது எதுவும் நடைபெறவில்லை. அதனால், கைது, பொலிஸ், நீதிமன்றம், தடுத்து வைப்பு என விவகாரம் இழுபட்டு விட்டது.

கைது நடைபெற்ற உடன் அங்கே சென்று கண்காணிக்கவும், நீதிமன்றத்தில் வழக்கைப் பேசி செயற்படவும் சட்டத்தரணிகள் உள்ளனர். இதற்கு அரசியல்வாதிகள் அவ்வளவு அவசியமில்லை.

ஆனால், ஆதரவளிக்கும் அரசுடன் கலந்து பேசி, ஒரு பொறிமுறையை உருவாக்கும் முகமாக அரசியல் தலைமை செயற்பட வேண்டும்.

எமது அரசுக்கு ஆதரவு அளியுங்கள். நன்றி. ஆனால், நீங்கள் அளிக்கும் ஆதரவை பிரயோசனம் இல்லாமல் அளிக்க வேண்டாம். இந்த அரசில் இருந்துகொண்டே இதை நான் சொல்கிறேன்.

எனது இந்தக் கருத்தை எவரும் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு மொழிபெயர்த்துக் கூறி, உங்கள் அமைச்சரே இப்படிச் சொல்கிறார், பாருங்கள் எனக் கலந்துரையாடி சிரமப்பட வேண்டியதில்லை.

செவ்வாய்க்கிழமை அமைச்சரவையில் சுத்தமான சிங்கள மொழியில் நேரடியாக அவர்களுக்கும் எல்லா அமைச்சர்களுக்கும் விளங்கும் முகமாக நானே இதை கூறுவேன்” – என்றுள்ளது.

-athirvu.in

TAGS: