மே 18 இனப்படுகொலை நாள்

மே 18 தமிழர் இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்பது ஈழப்போரின் இறுதிகட்டத்தில் இறந்தவர்களை நினைவு கூரும் நாள் ஆகும்.

இது இலங்கை தமிழர் மற்றும் உலகத் தமிழரால் ஆண்டு தோறும் மே18 ஆம் நாள் நினைவு கூரப்படுகிறது.

2009 ஆம் ஆண்டில் இந்நாளிலேயே இலங்கை வட கிழக்கு கரையில் அமைந்துள்ள முள்ளிவாய்கால் எனும் கிராமத்தில் ஈழப்போர் முடிவற்றது.

இலங்கை அரசால் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் பதினெட்டாம் நாளில், பல்லாயிரம் அப்பாவி தமிழர்கள் தமிழீழத்தில் படுகொலை செய்யப்பட்டார்கள், 21ஆம் நூற்றாண்டின் மிக பெரிய இனப்படுகொலையாக இது கருதப்படுகிறது.

இந்த இனப்படுகொலையில் குழந்தைகள்,பெண்கள், முதியவர்கள் என தமிழீழ மக்கள் ஈவிரக்கமின்றி அழித்து ஒழிக்கப்பட்டார்கள்.

அந்த நாளில் தாயகத்தில் எம் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டு இருக்கையில் எம் மக்களைக் காக்க உலக அரங்கெங்கும் வீதி வீதியாக தமிழர்கள் உலக தேசங்களிடம் எம் மக்களை காக்க வேண்டிப் பல போராட்டங்களை செய்தார்கள்.

எப்படியாவது தமது தொப்புள் கொடி உறவுகளை காக்க யாரேனும் உதவ மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பில் அன்று மலேசிய மண்ணில் பல்வேறு போராட்டங்களை நாம் முன்னெடுத்து போராடினோம்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இந்த நூற்றாண்டின் மிக கொடுமையான இனப்படுகொலை.

கேட்பார் யாரும் இன்றி ஈழத் தமிழர்களை கொடுங்கோல் அதிகாரத்தோடு இலங்கை அரசு கொன்றொழித்த பேரவலமானது.

உலகத் தமிழினத்தால் என்றுமே மறக்க முடியாத ஆறாத வடு.

காலம் காலமாக தமிழர் மீது கட்டவிழ்க்கப்பட்ட சிங்கள பேரினவாத அரசுகளின் இன அழிப்பு வரலாற்றின் உச்சக்கட்டமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் 70 ஆயிரம் முதல் மொத்தம் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான எம் மக்கள் ஈழத்தில் கொன்றொழிக்கப் பட்டார்கள்.

ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் காணாமல் போக்கப்பட்டார்கள். லட்சக்கணக்கான மக்கள் படுகாயமுற்றார்கள்.

கொத்துக் குண்டு, இரசாயனக் குண்டு மற்றும் பல்குழல் பீரங்கி என உலகில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பாவித்து ஈழத்தமிழினத்தை முற்றாக வேரறுக்கும் வெறியோடு, இந்திய வல்லாதிக்க துணையுடன் இலங்கை அரசு நடாத்திய தமிழினப் படுகொலையின் வலி சுமந்த நினைவுகளை உலகத் தமிழினம் நெஞ்சினில் சுமந்து வருகின்றது.

கொலைகளும் பாலியல் வல்லுறவுகளும் மட்டுமல்ல. ஆண்கள், பெண்கள், முதியவர்கள், இளையவர்கள், குழந்தைகள், நோயுற்றவர்கள், நோயற்றவர்கள் என்ற எந்த வேறுபாடுமின்றி வகைதொகை இல்லாமல் படுகொலை செய்யப்பட்டார்கள்.

சாவின் திசையில் முள்ளிவாய்க்காலை நோக்கி இடம் பெயர்ந்த நாட்களின் நினைவுகளையும் துப்பாக்கிகள் ஏந்திய சிங்கள இனவெறி இராணுவத்திடம் தாயும் நிர்வாணமாக தாயின் முன் மகனும் நிர்வாணமாக, தந்தையும் நிர்வாணமாக தந்தைக்கு முன் மகளும் நிர்வாணமாக, பாட்டனும் நிர்வாணமாக பாட்டன் முன்பு பேரன், பேத்தியும் நிர்வாணமாக சாரை சாரையாக சரணடைந்து முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்ட நினைவுகளையும் சுமந்தபடி ஈழத் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

ஒட்டுமொத்த மனித குலத்தின் மாண்புகளையும், நாகரிகத்தையும் மனிதநேயத்தையும் கேள்வி கேட்டப்படி அவர்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இன்றுவரை இதற்கான நியாயம் கிடைக்காமல் அத்தனையும் இழந்த இனமாக தமிழினம் இலங்கை அரசிடம் சிறைப்பட்டு இருக்கிறது.

மறுக்கப்பட்ட எம் மக்களின் நீதிக்காக இன்றும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் சர்வதேச அரசியல் நகர்வுகளூடாக போராடி வருகின்றார்கள்.

சர்வதேசமயப் படுத்தபட்ட தமிழீழ விடுதலை போராட்டத்தில் இலட்சியம் கனவை அடைய, ஒன்றுபட்ட தமிழினமாக தொடர்ந்தும் பயணிப்போம் என இந்த நாளில் விளக்கேற்றி, மலர் தூவி, அகவணக்கம் வீரவணக்கம் செலுத்தி,  உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.

இந்த மே 18 இனப்படுகொலை நாளை நினைவு கூர்ந்து, அந்த அனையா நெருப்பை நெஞ்சில் சுமந்து, கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்களுக்கு நீதி வேண்டி, அதற்கான முன்னெடுப்புகளை சர்வதேச தமிழர்கள் நாம் களம் காண வேண்டும். இனத்தின் முழு விடுதலையை வென்றெடுக்க வேண்டும்.

உலகத் தமிழர்களுக்கென தனி தமிழ் ஈழத்தை உருவாக்க உயிர் தீர்த்த விடுதலைப் புலிகளின் மகத்தான இலட்சிய இலக்கு போராட்டத்தை வருங்கால இளைய தமிழர் தலைமுறை பிள்ளைகளுக்கு பயிற்றுவித்து அரசியல் அறிவாயுத போராட்டமாக முன்னெடுத்துச் செல்வோம்.

இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை 

தொகுப்பு :

பாலமுருகன் வீராசாமி 

உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் 

014-3099379