இலங்கை அரசுக்கு தமிழ் உறவுகள் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை!

இந்த நாட்டில் ஒரு ரத்ன தேரர் இறந்துவிடுவார் என்பதற்காகவும், குழப்பம் ஏற்பட்டுவிடும் என்பதற்காகவும் முஸ்லிம்கள் மீதும், முஸ்லிம் தலைமைகள் மீதும் அழுத்தத்தைப் பிரயோகித்து அவர்களைப் பதவி நீக்கி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பௌத்த பேரினவாதத்துக்கு முடியுமானால், பத்து ஆண்டுகளுக்கு மேலாக அழுது கொண்டு, எமது உறவினர்களை தொலைத்துவிட்டு ஏதிலிகளாக நாங்கள் திரிகின்றோம். இதற்கு ஏன் இன்னும் ஒரு தீர்வினை அரசு பெற்றுத்தரவில்லை என முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நாட்டுக்காக ஒன்றிணைவோம் இறுதிநாள் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 08.06.2019நேற்றைய தினம் முல்லைத்தீவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இந் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமது உறவினர்கள் எங்கே என கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது அங்கு காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர், அவர்கள் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இன்றுடன் 824 ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களான நாம் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். ஜனாதிபதி அவர்களை ஏற்கனவே பலதடவைகள் நாம் சந்தித்தபோதும் எமக்கு சரியான பதில் வழங்கப்படவில்லை. இன்றைய தினம் ஜனாதிபதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தருகின்றபோது எங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்வதற்காக இந்த கவனயீர்ப்பை இன்றைய நாள் முன்னெடுத்திருந்தோம்.

ஜனாதிபதி அவர்களுடைய அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தோ அல்லது அவருடைய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தோ இந்த கவனயீர்ப்பை முன்னெடுக்கவில்லை. எங்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு கொடுக்கவில்லை என்பதை தெரிவிப்பதற்காகவே இந்த கவனயீர்ப்பை செய்கின்றோம். ஒவ்வொரு உறவினர்களும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக வீதி வீதியாக ஒவ்வொரு அமைச்சர்கள், தலைமை அமைச்சர், எங்களுடைய அரசியல் கட்சிகள், பொது நிறுவனங்கள், ஜனாதிபதி என அனைவரிடமும் மன்றாடி கேட்டு தெருவிலே அழுது புரண்டுகொண்டிருக்கின்றோம்.

எங்களுக்கு சரியானதொரு தீர்வு வேண்டும். எங்களுக்கு நிச்சயமாக எங்களுடைய காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வேண்டும். எங்களுக்கான சரியான தீர்வு தராத பட்சத்தில் இந்தப் போராட்டத்தினை மாற்றி ஒவ்வொருவராக எங்களுடைய உயிரை மாய்ப்பதற்கு தயாராக இருக்கின்றோம். இது இறுதி எச்சரிக்கையாக இருக்கட்டும்.

-athirvu.in

TAGS: