யாழில் வாள்வெட்டு குழுக்களின் அட்டகாசம்; அச்சத்தில் மக்கள்!

யாழ்ப்பாணம் கொக்குவில் மற்றும் சுதுமலை ஆகிய இருவேறு இடங்களில் இன்று மாலை வாள்வெட்டுக்குழுவினர் நடத்திய தாக்குதல்களில் பெறுமதிவாய்ந்த பொருட்கள் சேதமடைந்ததுடன் பெண் உட்பட இருவர் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இன்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொக்குவில் பொற்பதி வீதியில் உள்ள ஆலயம் ஒன்றின் பின்னால் மது அருந்திக்கொண்டிருந்த போது குறித்த அனைவரும் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சுமார் 10 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள், கொக்குவில் மஞ்சவனப்பதி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த கும்பல் ஒன்றே இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் வீட்டிலிருந்த தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட பெறுமதியான தளபாடங்கள் மற்றும் பொருட்கள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. எனினும் வீட்டிலிருந்தவர்கள் தெய்வாதீனமாக தாக்குதலிருந்து தப்பித்துள்ளனர்.

இந்நிலையிலேயே, குறித்த அனைவரும், சற்றுமுன்னர் கொக்குவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சுதுமலை பகுதியிலும், இன்று மாலை வாள்வெட்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றிருந்ததாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-athirvu.in

TAGS: