ஷவேந்திர சில்வா இலங்கை ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு – போர்க்குற்றப் புகார்

இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம், ஜனாதிபதி செயலகத்தில் இன்று வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

கெடெட் அதிகாரியாக 1984ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் இணைந்துக் கொண்ட ஷவேந்திர சில்வா, இராணுவ தளபதி பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர் இராணுவ பணிக்குழாம் பிரதானியாக கடமையாற்றியிருந்தார்.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஷவேந்திர சில்வா, இலங்கை இராணுவத்தின் 58ஆவது படைப் பிரிவின் தளபதியாக கடமையாற்றியிருந்தார்.

ஷவேந்திர சில்வா மீதான குற்றச்சாட்டுக்கள்

இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள், ஷவேந்திர சில்வா மீதும் சுமத்தப்பட்டிருந்தன.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த பலர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறியே மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா

இந்த சம்பவங்கள் தொடர்பில் மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா மீது அமெரிக்க நீதிமன்றத்தில் 2011ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

எனினும், தன்மீதான குற்றச்சாட்டுக்களை ஷவேந்திர சில்வா தொடர்ச்சியாக மறுத்துவந்துள்ளார்.

இந்த நிலையில், மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, 2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சர்வதேசக் குற்றங்கள் இழைக்கப்பட்டதை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஆதாரங்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் விசாரணைகளை மேற்கோள்காட்டி சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை யுத்தக் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டவர், ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்படத்தின் காப்புரிமைTWITTER

இந்த நிலையில், மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, இலங்கையின் புதிய இராணுவ தளபதியாக தெரிவு செய்யப்பட்டமைக்கு பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இதன்படி, இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டது, தமிழர்களை அவமதிக்கும் செயல் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

இலங்கை யுத்தக் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டவர், ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்படத்தின் காப்புரிமைTWITTER

யுத்தக் குற்ற மீறல்கள் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருப்பதானது, தமிழ் மக்களை அவமதிக்கும் செயல் என கூட்டமைப்பு கூறியுள்ளது.

இந்த நியமனம் வழங்கப்பட்டமையினால் தமிழர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தாம் அதிருப்தியில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் பதில்

இலங்கை இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் அமெரிக்கா கருத்து வெளியிட்டுள்ளது.

இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை குறித்து தாம் கவலையடைந்துள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கையொன்றின் ஊடாக குறிப்பிட்டுள்ளது.

இலங்கை யுத்தக் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டவர், ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்

ஐக்கிய நாடுகள் சபையினாலும், ஏனைய அமைப்புக்களினாலும் ஆவணப்படுத்தப்பட்ட அவருக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களானது பாரதூரமானதும், நம்பகமானதும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் தேவை மிகவும் முக்கியமானதாக காணப்படும் இந்த தருணத்தில், இந்த நியமனமானது இலங்கையின் சர்வதேச நன்மதிப்பையும், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான அதன் உறுதிப்பாடுகளையும் வலுவற்றதாக ஆக்கும் வகையில் அமைந்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.

அம்னெஸ்ட்டி இன்டர்நெஷனல் எதிர்ப்பு

மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய இராணுவ தளபதியாக நியமித்தமையானது, யுத்தத்தின் போது, மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலின் முழுமையாக குறைபாடாகவே கருதுவதாக அம்னெஸ்ட்டி இன்டர்நேஷனல் அமைப்பின் தெற்காசிய கிளை தெரிவிக்கிறது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கம் எதிர்ப்பு

“யுத்த குற்றவாளி ஒருவரை இராணுவத் தளபதியாக நியமிப்பது தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் எதிர்காலம் இல்லை என்ற விடயத்தை தற்போதைய ஜனாதிபதி கூறியுள்ளதாக” அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கம் தெரிவிக்கின்றது.

இலங்கை யுத்தக் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டவர், ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்

இந்த இயக்கத்தின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் பி.பி.சி தமிழுக்கு கருத்து வெளியிடும்போது இதனைக் கூறியிருந்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராகியுள்ள நிலையில், ஷவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதில் ஏதோ ஒரு ஒற்றுமை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த ஒற்றுமையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, யுத்தக் குற்றங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியிலேயே ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவை தமிழர்கள் தெரிவுசெய்தனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச ரீதியில் யுத்தக் குற்றவாளி என அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஒருவரை இராணுவ தளபதியாக நியமித்துள்ளதை, சர்வதேசத்திற்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் விடுத்துள்ள சவாலாகவே கருதுவதாக அருட்தந்தை சக்திவேல் குறிப்பிடுகிறார். -BBC_Tamil

TAGS: