காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் திறக்கப்படுகின்றமை ஏமாற்று வேலை: சி.வி

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை யாழில் திறக்க எடுக்கும் முயற்சி ஏமாற்று வேலையென வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சி.வி மேலும் கூறியுள்ளதாவது, “ஓ.எம்.பி அலுவலகத்தால் இதுவரை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு எந்தவிதமான பயனும் கிடைக்கவில்லை.

தற்போது யாழில் அதன் அலுவலகத்தை திறக்க எடுக்கும் முயற்சி வெறும் கண் துடைப்பு.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் கடந்த கால செயற்பாடுகளைப் பார்க்கின்றபோது தெளிவான எந்த இலக்குகளோ, கால அட்டவணையோ இல்லை.

இந்த அலுவலகத்துக்கு முறையிடப்படாத ஏராளமான காணாமல் போன சம்பவங்கள் இருக்கின்றது. ஆனால், அவை குறித்து இந்த அலுவலகம் கரிசனை கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

வெறுமனே கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் அடிப்படையில் அல்லாமல், எத்தனை பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிவதற்கான உண்மையான தரவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை.

அதேபோல காணாமல் போன உறவினர்கள் குறித்து முறைப்பாடுகளைச் செய்வதற்கு புலம்பெயர்ந்து வாழும் மக்களுடன் தொடர்புக்கொள்ள உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தெரியவில்லை.

எனவே, சர்வதேச நாடுகளையும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவையும் ஏமாற்றும் வகையில் இந்த அலுவலகம் திறக்கப்படுகின்றமை ஒரு கண் துடைப்பாகும்.

ஆகவே, அரசாங்கம் ஏமாற்று நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்” என அவர் கோரியுள்ளார்.

-tamilcnn.lk

TAGS: