இலங்கை ஈஸ்டர் குண்டு தாக்குதல்: சஹ்ரான் ஹாஷிம் பயன்படுத்திய ஆயுதங்கள் கண்டுபிடிப்பு

இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று (ஏப்ரல் 21) தற்கொலைக் குண்டுதாக்குதல்களை நடந்திய சஹ்ரான் குழுவினர் பயன்படுத்தியதாக நம்பப்படும் ஒரு தொகை ஆயுதங்களை இன்று (புதன்கிழமை) போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்தத் தகவலை போலீஸ் பேச்சாளர் ருவன் குணசேகர ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

அம்பாறை மாவட்டம் பாலமுனை பிரதேசத்தின் துறைமுக வீதியிலுள்ள வளவு ஒன்றினுள் மேற்படி ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்தன.

ஆயுதங்கள்

அரசு புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அம்பாறை போலீஸார் இந்த ஆயுதங்களைக் கைப்பற்றியதாகப் புலனாய்வு பிரிவு உத்தியோகஸ்தர் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்தார்.

ரி56 ரக துப்பாக்கி – 01, துப்பாக்கி ரவைகள் – 23, டெட்டனேட்டர் குச்சி – 07, யூரியா – 02 கிலோகிராம் உள்ளிட்ட பல பொருட்கள், இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

ஏற்கனவே பாலமுனை பகுதியில் சஹ்ரான் குழுவினரின் 35 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பாலமுனை – ஹுசைனியா நகரிலுள்ள வீடொன்றிலிருந்து கடந்த மே மாதம் 31ஆம் தேதி, பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது, 35 லட்சம் ரூபாய் பணமும், நகைகள் சிலவும் கைப்பற்றப்பட்டிருந்தன.

இதேவேளை, பாலமுனையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவிருந்தே சஹ்ரான் குழுவினர் பயன்படுத்தியதாக நம்பப்படும் மடிக்கணிணி ஒன்றினையும் சில மாதங்களுக்கு முன்னர் பாதுகாப்புத் தரப்பினர் கைப்பற்றியிருந்தனர்.

-BBC_Tamil

TAGS: