வடகொரியா விருப்பப்படி அணு ஆயுத பேச்சுவார்த்தை தொடரும் – அமெரிக்க அதிபர்!

வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருந்தாலும், அந்நாட்டுடன் அணு ஆயுத பேச்சு வார்த்தை நடத்த தங்கள் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டதை கண்டித்து வடகொரியா அவ்வப்போது குறுகிய இலக்கை தாக்கும் ஏவுகணைகளை சோதனை செய்து எச்சரித்து வந்தது.

மேலும் நின்று போன அணு ஆயுதம் தொடர்பான பேச்சு வார்த்தையையும் மீண்டும் தொடர வேண்டும் என அமெரிக்காவை வலியுறுத்தியது வந்தது. இதனை அமெரிக்காவும் ஏற்றிருந்த நிலையில், ஒரு வழியாக வருகிற 5ம் தேதி ஸ்வீடனில் வட கொரியாவுடன் அணுஆயுதம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதனை வடகொரியா மற்றும் அமெரிக்காவும் உறுதி செய்திருந்தனர். ஆனால் இந்த சந்திப்புக்கான தேதி அறிவிக்கப்பட்டும், வடகொரியா கடந்த இரு தினங்களுக்கு முன் நீர்மூழ்கி கப்பலில் வைத்து இரு ஏவுகணைகளை சோதனை செய்திருந்தது.

இதனால் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பிருக்காது என கருதப்பட்ட நிலையில், வடகொரியா பேச்சுவார்த்தையை விரும்புவதால், திட்டமிட்டபடி தாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். முன்னதாக அணு ஆயுதம் தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று ஸ்வீடன் தலைநகர் ஸ்டொக்காமில் (Stockholm) தொடங்கி நடைபெற்று வருகிறது.

-athirvu.in