அரசியல் உரிமைகளை வெற்றி கொள்ளவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறேன்: எம்.கே.சிவாஜிலிங்கம்

தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகளை வெற்றி கொள்வதற்காகவே வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தவிசாளரும், வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக எம்.கே.சிவாஜிலிங்கம் சார்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தேர்தல் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

அது குறித்து கருத்துத் தெரிவித்த எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்கள் சார்பிலே ஒரு பொது வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும். தென்னிலங்கை பிரதான கட்சிகளை எந்த விதமான திட்டவட்டமான வாக்குறுதிகளும் இல்லாமல் பின்பற்றுவது பயனில்லை எனும் கருத்து எமது தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் ஓங்கி ஒலித்ததை அடுத்து , இன்றைய தினம் என்னை ஒரு வேட்பளராக முன்னிறுத்தி வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தவிசாளர் பதவி உள்ளிட்ட கட்சி பதவிகளில் இருந்து விலகுவதாக கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சிறிகாந்தாவிடம் எனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளேன். ஆனால் சாதாரண உறுப்புரிமையில் கட்சியில் அங்கத்துவம் வகிப்பேன்.

தமிழ் மக்களின் விருப்பத்திற்கு இணங்க கட்சி சார்பின்றி தேர்தலில் போட்டியிடவுள்ளேன். தமிழ் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் வேட்பாளராக களமிறங்கியுள்ளேன். தாயகத்தில் உள்ளவர்களினதும் புலம்பெயர்நாடுகளில் உள்ளவர்களினதும் வேண்டுகோளின் அடிப்படையிலேயே போட்டியிடுகிறேன்.” என்றுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: