இலங்கை விமான விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

பதுளை – ஹப்புத்தளை பகுதியில் சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றதாக இலங்கை விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரத்ன தெரிவித்தார்.

வீரவில பகுதியிலிருந்து கண்காணிப்பு பயணமாக சென்ற விமானப்படைக்கு சொந்தமான வை-12 சிறிய ரக விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்களில் விமானப்படையைச் சேர்ந்த இரண்டு விமானிகளும், இரண்டு கண்காணிப்பாளர்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் எரியுண்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் கூறினார்.

விசாரணைகள் ஆரம்பம்

ஹப்புத்தளை பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானமைக்கான காரணத்தை கண்டறியும் வகையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விசாரணைகளுக்காக விமானப்படை குழுவொன்று சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக விமானப்படை பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

விசாரணைகளின் பின்னரே விபத்துக்கான காரணம் தொடர்பில் தகவல்களை வெளியிட முடியும் என இலங்கை விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரத்ன தெரிவித்தார்.