’ஆதரவுக்கான காரணம் எழுத்துமூலம் வேண்டும்’

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர், அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தமைக்கான காரணங்களை, இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் எழுத்துமூலமாக தலைவருக்கும், கட்சியின் செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசமைப்பின் 20ஆவது திருத்தித்துக்கு  ஆதரவாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் வாக்களித்தமைத் தொடர்பிலும், அதன் பின்னரான அவர்களின் நடவடிக்கை தொடர்பிலும் விளக்கம் கோருவதற்காக அக்கட்சியின் பதவிவழி உத்தியோகத்தர்கள் பங்குப்பற்றியக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் இன்று (13) கொழும்பில் நடைபெற்றது.

இதன்போது, 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், எம்.எஸ்.தௌபீக், ஹாபீஸ் நசீர் அஹமட் ஆகியோர் தாம் அவ்வாறு நடந்து கொண்டற்கான காரணங்களை வாய்முலமாக கூறியுள்ளனர். இதுத் தொடர்பில், கட்சியின் அதிஉயர்பீட உறுப்பினர்களும் தமது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயத்தில் முக்கியமான முடிவை மேற்கொள்வதற்கு, உரிய காரணங்கள் எழுத்து மூலம் இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் தலைவருக்கும், செயலாளருக்கும்  அனுப்பி வைக்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்பின்னர் மேற்குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் மீதும் மேற்கொள்ளப்பட  வேண்டிய நடவடிக்கை குறித்து கட்சி முடிவெடுக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamilmirror