தலிபான்களை இலங்கை அரசு ஆதரிக்க கூடாது- விக்ரமசிங்கே

ரனில் விக்ரமசிங்கே

முதல் கட்டமாக ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கை தூதரகத்தை வாபஸ் பெற வேண்டும்.

கொழும்பு: ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்களுக்கு ஆதரவாக சீனா செயல்பட்டு வருகிறது.

சீனாவின் நட்பு நாடாக இலங்கை இருந்து வருகிறது. சீனாவை பின்பற்றி இலங்கையும் ஆப்கானிஸ்தானை ஆதரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீது கர்சாயை இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே சமீபத்தில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அங்குள்ள நிலைமைகளை கேட்டு அறிந்துள்ளார்.

இந்த நிலையில் தலிபான்களுக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என்று இலங்கையின் முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே இலங்கை அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது சம்பந்தமாக அவர் கூறியிருப்பதாவது:-

அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை தாக்கிய அல்-கொய்தா பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்பட்டார்கள். அவர்களுக்கு தலிபான்கள் ஆதரவு கொடுத்தார்கள். இப்போது மீண்டும் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் சர்வதேச பயங்கரவாதிகளின் மையமாக செயல்பட வாய்ப்பு உள்ளது.

இலங்கையிலும் அதன் தாக்கம் ஏற்படலாம். பயங்கரவாதிகளுக்கு இலங்கை ஒரு போதும் ஆதரவாக இருக்கக்கூடாது. அந்த வகையில் தலிபான்களுக்கு எதிரான நிலையை இலங்கை அரசு எடுக்க வேண்டும்.

முதல் கட்டமாக ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கை தூதரகத்தை வாபஸ் பெற வேண்டும். மேலும் தலிபான்களால் புத்த மதத்திற்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

ஏற்கனவே அவர்கள் ஆட்சி காலத்தில் பாமியானில் உள்ள புத்தர் சிலைகளை அவர்கள் உடைத்தார்கள். அவர்கள் புத்த மதத்திற்கு எதிரானவர்கள். எனவே அவர்களை ஒருபோதும் இலங்கை ஆதரிக்கக் கூடாது.

இவ்வாறு ரனில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.

maalaimalar