இந்தியா 50 ஆயிரம் டன் கோதுமையை அடுத்த வாரம் அனுப்புகிறது – ஆப்கானிஸ்தான் தூதர்

கோதுமை

ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண மனிதாபிமான உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது.

இந்தியா 50 ஆயிரம் டன் கோதுமையை அடுத்த வாரம் அனுப்புகிறது – ஆப்கானிஸ்தான் தூதர்

காபூல்: ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி சுமார் 6 மாதங்கள் ஆகும் நிலையில், அங்கு மக்கள் வாழ்வதற்கான சூழல் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இது உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 1-ம் தேதி 1.6 டன் அளவிலான உயிர்காக்கும் மருந்துகளை விமானம் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது. அதன் தொடர்ச்சியாக 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகளும் வழங்கப்பட்டது.

இதற்கிடையே, கடந்த மாதம் 2 டன் அளவிலான உயிர்காக்கும் மருந்துகளை இந்தியா, ஆப்கானிஸ்தானிடம் வழங்கியது.

ஆப்கானிஸ்தான் மக்களுக்கான நமது மனிதாபிமான உதவியின் ஒரு பகுதியாக, ஆப்கானிஸ்தானுக்கு 2 டன் அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகளை கொண்ட 3-வது தொகுதி மருத்துவ உதவியை இந்தியா வழங்கியது. அவை காபூலில் உள்ள இந்திரா காந்தி ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டன என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் வழியாக சாலைப்பயணம் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு 50 ஆயிரம் டன் கோதுமையை அடுத்த வாரம் இந்தியா அனுப்ப உள்ளது என அந்நாட்டு தூதுவர் தெரிவித்தார்.

மேலும், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவும் வகையில் 200 கோடி ரூபாய் மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கி உள்ளதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

maalaimalar