அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் போராட்டம் – வடக்கு கிழக்கு மக்களுக்கு அழைப்பு!

அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த போராட்டமானது ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளது.

இப் போராட்டத்தில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள மக்களும் பங்கேற்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாட்டில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது, நிதி நிலைமை பற்றி எதுவும் சரியாகத் தெரியவருவதில்லை. நிதி அமைச்சர் நம்பிக்கை இழந்து வருகின்றார். பொருட்களின் விலையும் அதிகரித்து வருகின்றது.

ஆகவே, இந்த அரசாங்கத்திற்கு மக்களின் எதிர்ப்பைக் காட்டும் வகையில் இன்று கொழும்பில் மாபெரும் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம்.

நாட்டின் சகல பகுதிகளில் இருந்தும் மக்கள் வருவார்கள். குறிப்பாக வடக்கு, கிழக்கில் இருந்தும் கொழும்பு நோக்கி வந்து, தமது எதிர்ப்பை மக்கள் வெளிப்படுத்துவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

IBC Tamil