இலங்கை நெருக்கடி: ‘பிழைத்தால் இந்தியாவில், இல்லையேல் கடலில்’ – தமிழகம் வந்த குடும்பங்களின் கண்ணீர் கதை

இலங்கையில் ஏற்பட்டுள்ள தீவிர பொருளாதார நெருக்கடி மற்றும் கடும் விலை உயர்வு காரணமாக இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு தப்பித்து வரத் தொடங்கியுள்ளனர். ஆனால், அவர்களை சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தவர்களாக கருதுவதா அல்லது அகதியாக பதிவு செய்வதா என்ற குழப்பத்தில் இந்திய அரசும் தமிழக அரசும் உள்ளன.

இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு வந்துள்ள இலங்கை தமிழர்களை எத்தகையவர்களாக கருதலாம் என்பது குறித்து இந்திய வெளியுறவுத்துறையிடம் தமிழ்நாடு அரசு விளக்கம் தருமாறு கோரியுள்ளது. இது குறித்து தமிழக அரசின் அயலக தமிழர் நலம் மற்றும் மறுவாழ்வு துறை கமிஷனர் ஜெசிந்தா லாசரஸ் பிபிசி தமிழிடம் பேசுகையில், “இந்தியா வந்துள்ள இலங்கை தமிழர்களில் பெண்கள், குழந்தைகள் உள்ளனர். அவர்களை மனிதாபிமானத்துடன் நடத்துமாறு அதிகாரிகளை கேட்டுள்ளோம். மத்திய அரசிடம் தற்போது வந்துள்ள இலங்கை தமிழர்களை எப்படி கருதலாம் என கேட்டுள்ளோம். அதன் முடிவு வரும்வரை முகாம்களில் அவர்களை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்று கூறினார்.

இந்திய வெளியுறவுத்துறையை இது தொடர்பாக பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியபோது, உயர் மட்ட அளவில் இது குறித்து விவாதித்து வருகிறோம். விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டது.

ஒரே நாளில் தமிழகம் வந்த 16 பேர்

சமீபத்தில் ஒரே நாளில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர். தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்தவர்கள் மீது மெரைன் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதி இலங்கைக்கு அருகே உள்ளதால் இலங்கையில் உள்ள அந்நாட்டு தமிழர்கள் அங்கு இறுதிகட்ட உள்நாட்டுப்போரின் போது அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய சூழலில், இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுபாட்டால் இலங்கை தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வரக்கூடும் என தகவல் வெளியானது. எனவே சர்வதேச கடல் எல்லை மற்றும் கடலோர பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என கடலோர பாதுகாப்பு குழுமத்துக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை இரவு மன்னார் மாவட்டம் பேசாலை கடற்கரையில் இருந்து மன்னாரை சேர்ந்த ஆறு பேர் ஒரு பைபர் படகில் புறப்பட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 3 மணி அளவில் தனுஷ்கோடியை அடுத்துள்ள நான்காம் மணல் திட்டு பகுதியில் வந்து இறங்கினர்.

மணல் திட்டில் அதிகாலை முதல் குடிநீர் மற்றும் உணவின்றி கைக்குழந்தையுடன் இலங்கை தமிழர்கள் தவித்து வருவதாக அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் மண்டபம் கடலோர காவல் படை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

அதன் அடிப்படையில் மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு சொந்தமான ‘ஹோவர் கிராப்ட்’ படகு மூலம் மணல் திட்டில் இருந்த இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு அழைத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து திங்கட்கிழமை காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்கரையில் இருந்து தனது சொந்த பைபர் படகில் வவுனியாவை சேர்ந்த ஐந்து குழந்தைகள், மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் என இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் தனுஷ்கோடிக்கு புறப்பட்டனர்.

நடுக்கடலில் 37 மணி நேரம் தவித்த குடும்பங்கள்

நடுக்கடலில் படகின் எஞ்சினில் ஏற்பட்ட பழுது காரணமாக அதில் இருந்தவர்கள் கடும் வெப்பத்துக்கு மத்தியில் உணவு, தண்ணீரின்றி சுமார் 37 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தைகளுடன் நடுக்கடலில் தவித்தனர். பல மணி நேர முயற்சிக்குப் பின் எஞ்சின் சரி செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் தனுஷ்கோடி வடக்கு பாலம் மீன்பிடி துறைமுகத்திற்கு அவர்கள் வந்தடைந்தனர்.

பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்திய பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் விசாரணைக்குப் பின் 16 இலங்கை தமிழர்கள் மீதும் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி இலங்கை தமிழர்களை புழல் சிறையில் அடைக்கவும், அவர்களுடன் வந்துள்ள சிறுவர்களை தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.

இதையடுத்து இலங்கை தமிழர்களை புழல் சிறையில் அடைக்க அழைத்துச் செல்ல தயாரான போது, தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தமிழர்கள் அனைவரையும் மண்டபம் அகதிகள் மறு வாழ்வு முகாமில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கமாறு சிறப்பு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து இலங்கை தமிழர்களை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லாமல் அரசின் உத்தரவு இரவு வரும் என எதிர்பார்க்கப்பட்டதால், இலங்கை தமிழர்கள் நீதிமன்ற வளாகத்திலேயே வைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, இரவு நெடுநேரமாகியும் நீதிமன்றத்துக்கு வரவில்லை. இதையடுத்து இலங்கை தமிழர்கள் மீண்டும் தனுஷ்கோடி மெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதையடுத்து தமிழகத்திற்கு வந்த இலங்கை தமிழர்களை சிறையில் அடைப்பதா மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைப்பதா என மெரைன் போலீசாருக்கு குழப்பம் நிலவியது.

‘இலங்கையில் சாமானிய மக்கள் வாழ முடியாது’

இந்த நிலையில், இலங்கை தமிழர்கள் தமிழகம் வருவதற்கான காரணம் குறித்து தனுஷ்கோடி வந்துள்ள மன்னாரை சேர்ந்த கியூரி பிபிசி தமிழிடம் பேசுகையில், “இலங்கையில் தற்போது நிலவி வரும் கடுமையான விலைவாசி உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக தனுஷ்கோடி வர முயற்சி செய்து திங்கள்கிழமை இரவு அங்கிருந்து கிளம்பினோம். மன்னார் மாவட்டத்திலிருந்து பைபர் படகில் எங்களை அழைத்து வந்து இங்கு விட்டவர்களின் முழுமையான தகவல் எதுவும் எங்களுக்கு தெரியாது. ஆனால் தமிழகம் அழைத்து வர தலா நபர் ஒருவருக்கு 10 ஆயிரம் என ஆறு நபர்களுக்கு 60 ஆயிரம் கொடுத்தோம்,” என்றார்.

இரண்டாவது முறையாக தமிழகத்தில் தஞ்சம்

தமிழகத்திற்கு அகதியாக வந்துள்ள சிவரத்தினம் பிபிசி தமிழிடம் பேசுகையில்,”நான் மன்னார் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் செய்து வருகிறேன். தற்போது இலங்கையில் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அங்கு சாமானிய மக்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எனது குடும்பத்துடன் எனது அக்கா குடும்பத்தையும் சேர்த்து 10 பேர் திங்கள்கிழமை புறப்பட்டு செவ்வாய்க்கிழமை இரவு தனுஷ்கோடி வந்து சேர்ந்தோம்.

இலங்கையில் தற்போது அரிசி 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 300 ரூபாய் கொடுத்தாலும் போதிய அரிசி கிடைப்பதில்லை குழந்தைகளுக்கு கலந்து கொடுக்கும் பால் மாவு விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

 

இலங்கையைப் பொறுத்தவரை தற்போது உள்ள சூழ்நிலையில் கடுமையாக உழைத்தால் ஒரு வேளை சாப்பாடு சாப்பிட முடியும் ஆனால், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் நாங்கள் குடும்பத்துடன் இந்தியா வந்துள்ளோம்.

எங்களை போல் இலங்கையில் வசிக்கும் பெரும்பாலானோர் தமிழகத்திற்கு வருவதற்கு தயாராகி வருகின்றனர். இருப்பினும் பைப்பர் படகிற்கு போதிய மண்ணெண்ணை கிடைக்காததாலும், மண்ணெண்ணெய் விலை உயர்வால் வாங்க இயலாததாலும் இலங்கையில் தங்கி உள்ளனர்.

நான் தனுஷ்கோடி வந்தது எனது சொந்த படகு என்பதால் 15 ஆயிரம் ரூபாய்க்கு மண்ணெண்ணெய் வாங்கி கொண்டு குடும்பத்துடன் அகதியாக தமிழகம் வந்துள்ளேன்.

இலங்கையில் ஒரு குடும்பம் ஒரு நாளைக்கு வயிறார சாப்பிட 2500 ரூபாய் தேவைப்படும் அதுவும் இரண்டு வேளை உணவு மட்டும் சாப்பிட முடியும் அடுத்த வேளைக்கு மீண்டும் சமைக்க வேண்டும்.

1990 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போரின் போது உயிரை காப்பாற்றி கொள்ள அகதியாக வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருந்தேன்.இலங்கையில் பிரச்சனை முடிவுக்கு வந்த பின்பு 2012 ஆம் ஆண்டு விமானம் மூலம் மீண்டும் இலங்கைக்குச் சென்றேன். ஆனால், தற்போது இலங்கையில் நிலவும் உணவு பொருள் தட்டுப்பாடு காரணமாக பட்டினிச்சாவு இருந்து பிழைப்பதற்காக மீண்டும் இரண்டாவது முறையாக தமிழகத்திற்கு அகதியாக வந்து உள்ளேன்,” என்கிறார் சிவரத்தினம்.

‘ஒரு நாள் சாப்பட்டிற்கு 3 ஆயிரம் செலவாகிறது’

இலங்கையில் இருந்து வந்துள்ள சிவசங்கரி பிபிசி தமிழிடம் பேசுகையில், “ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பாட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் வரை செலவாகிறது. அதுவே அசைவ உணவு சமைத்து சாப்பிட வேண்டும் என்றால் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை ஒரு வேலைக்கு செலவாகிறது.” என்கிறார்.

“எனது கணவர் கூலி வேலைக்கு செல்கிறார். அவருக்கு தினசரி வருமானம் 1500 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. இந்த வருமானத்தை வைத்து என்னால் எப்படி என் குழந்தையுடன் இலங்கையில் வாழ முடியும், எனவே என் தம்பி குடும்பத்துடன், படகில் இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளோம்.

இலங்கை அரசு இதுவரை எந்த விதமான உதவியும் மக்களுக்கு செய்யவில்லை. இலங்கையில் பெரும்பாலானோர் தமிழகத்திற்கு வர தயாராக இருக்கின்றனர். ஆனால் அவர்கள் எப்போது வருவார்கள் என்பது குறித்து தகவல் எதுவும் தெரியாது.

உரிய ஆவணங்கள் இல்லாததால் சட்ட நடவடிக்கை

தமிழகத்திற்கு வரும் இலங்கை அகதிகள் மீது எடுக்கப்பட்டு வரும் சட்ட நடவடிக்கைகள் குறித்து கடலோர காவல் குழும கண்காணிப்பாளர் குணசேகரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், 2012ஆம் ஆண்டுக்கு பிறகு இலங்கையில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்கு வரும் இலங்கை தமிழர்களை, அகதிகளாக பதிவு செய்யாமல் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

 

இலங்கையில் இருந்து வரக்கூடிய நபர்கள் உரிய ஆவணங்களுடன் விமானம் மூலம் வந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிக்க முடியும். உரிய ஆவணங்கள் இன்றி வரும் நபர்கள் மீது நிச்சயம் வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். அதன் அடிப்படையில் தான் தற்போது தனுஷ்கோடி வந்துள்ள இலங்கை தமிழர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இலங்கையில் இருந்து குழந்தைகளுடன் தமிழகம் வரும் இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் தங்க அனுமதி கோரினால் அதை ஏற்க முடியாது. அவர்கள் எந்த நோக்கத்தோடு தமிழகத்திற்குள் வருகிறார்கள், அவர்கள் யார் என்ற பல்வேறு கோணங்களில் சந்தேகம் உள்ளதால் சட்ட ரீதியான நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டு வருவதாக மெரைன் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் தெரிவித்தார்.

சர்வதேச கடல் எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த திட்டம்

கடந்த செவ்வாய்கிழமை ஒரே நாளில் 16 இலங்கை தமிழர்கள் இரு நாட்டு பாதுகாப்பையும் மீறி கடல் வழியாக படகில் தமிழகத்திற்குள் நுழைந்தது கடல் பாதுகாப்பு அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக இன்னும் பலர் தமிழகம் வர தயாராக இருப்பதாக இலங்கையில் இருந்து வந்துள்ள இலங்கை தமிழர்களிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்திய கடற்பரப்பில் கடற்படை, கடலோர காவல் படை அதிகாரிகள் பாதுகாப்பை தீவிரப்படுத்த முடிவு செய்ததுடன், கடற்கரை ஓரங்களில் தமிழக கடலோர காவல் குழும போலீசார், மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக இந்திய கடலோர காவல் படை அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

 

 

BBC Tamil